இளைஞர்களின் இதயங்களை வென்ற காவல் துறை அதிகாரி... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...
மோட்டார் சைக்கிள்களில் குழுவாக பயணம் செய்த இளைஞர்களின் இதயங்களை காவல் துறை அதிகாரி ஒருவர் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை மாடிபிகேஷன் செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ''மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 52(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்திலும், உற்பத்தியாளர்கள் வழங்கிய ஒரிஜினல் பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வாகனத்தில் எவ்வித மாடிபிகேஷனும் செய்யக்கூடாது'' எனவும் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து இந்தியாவில் இனி வாகனங்களை மாடிபிகேஷன் செய்தால், அது சட்ட விரோதமாக கருதப்படும். முன்னதாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியான உடனேயே, மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையும் தொடங்கப்பட்டு விட்டது. இதன் ஒரு பகுதியாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மோட்டார் வாகன துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் அதிகம் உலா வரும் கேரளாவில் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆட்டோ ஷோ நடைபெற்றது.

இந்த ஆட்டோ ஷோ அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மோட்டார் வாகன துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், மாடிபிகேஷன் செய்யப்பட்ட 10 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவ்வாறு கேரளாவில் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் அதிரடி தொடர்ந்து வருகிறது. மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமூக வலை தளங்களும் கூட பயன்படுத்தப்படுகின்றன.

இதன்படி மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவு செய்பவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக வாகனங்களை மாடிபிகேஷன் செய்து பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே புதிய மாடிபிகேஷன் விதிமுறைகளுக்கு எதிராக சமீபத்தில் கேரளாவில் பெரும் போராட்டமே நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 15 பேரை போலீசார் கைது செய்து அதிரடி காட்டினர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், கேரளாவில் மோட்டார் வாகன துறை அதிகாரிகள்-போலீசார் மற்றும் வாகன ஆர்வலர்கள் இடையே இணக்கமற்ற சூழல் நிலவி கொண்டுள்ளது.

ஆனால் அதனை தவிடுபொடியாக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான அதிரப்பள்ளி அருவி நோக்கி இளைஞர்கள் சிலர் குழுவாக மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். வழியில் சற்று இளைப்பாறுவதற்காக சாலையோரமாக பைக்குகளை நிறுத்தி விட்டு அவர்கள் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது செவர்லே டவேரா (Chevrolet Tavera) காரில் போலீசார் சிலர் அங்கு வந்தனர். இளைஞர்களை பார்த்ததும் அவர்கள் காரை நிறுத்தினர். அப்போது காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த அதிகாரி, இளைஞர்களை அழைத்து பேசினார். அந்த குழுவில் இருந்த இளைஞர்கள் அனைவரும் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை சரியாக அணிந்திருந்தனர்.

எனவே அந்த அதிகாரி, இளைஞர்களிடம் கண்டிப்புடன் பேசாமல் மிகவும் கனிவாக பேசினார். எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? என இளைஞர் குழுவிடம், அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார். இதற்கு இளைஞர்கள் அதிரப்பள்ளி அருவி என பதில் அளித்தனர். இதன்பின்பு சாலையில் குழுவாக செல்லும்போது எப்படி பயணிக்க வேண்டும்? என்பது தொடர்பாக இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை அந்த அதிகாரி வழங்கினார்.

இதன்படி குழுவாக பயணிக்கும்போது ஒட்டுமொத்த சாலையையும் அடைத்து விடக்கூடாது என அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு செய்தால், சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏற்படும் எனவும் அவர் கூறினார். இதுதவிர காலை உணவு முடித்து விட்டீர்களா? எனவும் இளைஞர்கள் குழுவிடம், அந்த அதிகாரி கேட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Bikerboii_Vlogs வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பொதுவாக இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகதான் இருக்கும். இரு சக்கர வாகனங்களை கண்டு விட்டால், எப்படியாவது பணத்தை கறந்து விடுவதை பெரும்பாலான போலீசார் வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் குழுவாக பயணிக்கும் பைக் ஆர்வலர்களை பார்த்து விட்டால் சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட சூழலில் குழுவாக பயணித்த பைக் ஆர்வலர்களிடம் காவல் துறை அதிகாரி கனிவாக நடந்து கொண்ட விதம் கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








