புத்தம் புதிய 338சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்!
குறைவான விலையில் புதிய 338சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது ராயல் என்ஃபீல்டு 350 சிசி மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. மிக அதிக விலை கொண்ட மாடல்களை விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ட்ரீட் 750 என்ற பெயரில் 750 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், அதனை விட குறைவான விலையில் புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்க உள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களில் 338 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலை சீனாவை சேர்ந்த செஜியாங் கியான்ஜியாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.

அடுத்த ஆண்டு இந்த புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகமாக உள்ளது. முதலில் இந்த புதிய 338 சிசி மோட்டார்சைக்கிள் மாடலானது சீனாவில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

சீனாவில் பெனெல்லி பைக்குகளை செஜியாங் கியான்ஜியாங் நிறுவனம்தான் விற்பனை செய்து வருகிறது. அந்நாட்டின் புகழ்பெற்ற கீலி வாகன தயாரிப்பு குழுமத்தின் கீழ்தான் இந்த செஜியாங் கியான்ஜியாங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான உரிமையை செஜியாங் கியான்ஜியாங் பெற இருக்கிறது. இந்நாட்டில் இருந்து பிற ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு இறுதியில் சீனாவில் இந்த புதிய ஹார்லி டேவிட்சன் 338 சிசி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வரும் 2021ம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியும் புதிய 350 க்ரூஸர் பைக் மாடலும் வர இருக்கிறது. மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350 சிசி மாடல்களுக்கு இந்த புதிய மாடல்களின் வரவு கடும் போட்டியை தரலாம்.


Click it and Unblock the Notifications








