விதிமீறலில் ஈடுபட்ட மாவட்ட நீதிபதி: போலீஸாரின் அதிரடியால் உண்மை அம்பலம்.. என்ன செய்தார் என தெரியுமா?
சட்டத்தையும், நீதியையும் காக்க வேண்டிய நீதித்துறையைச் சேர்ந்த மாஜிஸ்ட்ரேட் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் போலீஸாரின் அதிரடியால் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், இந்தியாவை போக்குவரத்து விதிமீறலே இல்லாத நாடாக மாற்றும் வகையில், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.

இச்சட்டம், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆகையால், இதனை அமலுக்குக் கொண்டுவரும் பணியில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் டெல்லி, ஒடிசா மற்றும் ஹரியானா போன்ற ஒரு சில மாநிலங்கள் ஏற்கனவே புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டன.

ஆகையால், அம்மாநில போலீஸார்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தேடிபிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
போலீஸாரின் இந்த கெடுபிடியில் பெரும்பாலும் சாதாரண குடிமக்களே சிக்கி வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது அரசு அதிகாரிகளும் மாட்டி கொள்கின்றனர்.

அந்தவகையில், அண்மையில் செல்போனில் பேசியபடி சென்ற பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரிக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது, தற்போது உயர்த்தப்பட்டுள்ள அபராதத்தைக் காட்டிலும் கூடுதலாக ஒரு மடங்கு உயர்த்தப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுவாக, ஒரு சில மாநில அரசுகள், மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் விதியை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு குடிமக்களைக் காட்டிலும் இருமடங்கு அபராதத்தை விதிக்க வேண்டும் என்ற கொள்கையை கையாண்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே பஞ்சாப் மாநில போலீஸுக்கு இரு மடங்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது.

அவர், ஸ்கூட்டரில் செல்லும்போது செல்போனில் பேசிய குற்றத்திற்காகவும், காலாவதியான காப்பீட்டு திட்டத்துடன் அந்த ஸ்கூட்டரை இயக்கிய குற்றத்திற்காகவும், ரூ. 10 ஆயிரத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதுவே, இந்த குற்றத்தை குடிமகன்கள் செய்திருப்பார்களானால், அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு, போக்குவரத்து விதிமீறல் குறித்த விவகாரத்தில் நாடே சூடுபிடித்துக் கொண்டிருக்கும் வேலையில் நீதியையும், சட்டத்தையும் காக்க வேண்டிய நீதித்துறையைச் சேர்ந்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம், பிஹார் மாநிலம், கத்தியார் பகுதியில் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை அம்மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கத்தியார் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டாக ராஜ் மோஹன் ஜா செயல்பட்டு வருகின்றார். இவர், நேற்றைய தினம் நீதிமன்றத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனை, அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை அதிகாரி இயக்கியுள்ளார். அப்போது, இருவரும் தலைக்கவசம் அணியவில்லை என கூறப்படுகின்றது.

ஆகையால், அவர்கள் செல்லும்போது தடுத்து நிறுத்திய மற்றுமொரு போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஆனால், பின்னால் அமர்ந்திருந்த நீதிபதி, போலீஸாரை வழியை விட்டு விலகுமாறு அதட்டும் தோணியில் கூறுகின்றார். மேலும், இருசக்கர வாகனத்தை அங்கிருந்து கிளப்புமாறு, பின்னால் அமர்ந்தபடியே பாதுகாப்பு அதிகாரிக்கு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், அவர்களை வாகனத்தை நிறுத்துமாறு போலீஸார் கூறுகின்றனர். ஆனால், அதற்கு கட்டுப்படாத மாஜிஸ்ட்ரேட், சம்பவம் இடத்திலிருந்து கணப்பொழுதில் தப்பிக்கின்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த மற்றுமொரு போலீஸாரின் கேமிராவில் படமாக்கப்பட்டது. மேலும், இது செய்தியாளர்களிடம் சிக்கவே, விவகாரம் மிகப்பெரிய அளவில் வைரலாக ஆரம்பித்தது.

அத்துடன், சில பத்திரிக்கையாளர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட மாஜிஸ்ட்ரேட்டின் அலுவலகத்திற்கு சென்று பேட்டி காண முயற்சித்தனர். அப்போது, தான் இவ்வாறு எதுவும் செய்யவில்லை என்றும், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்க தொடங்கினார். தொடர்ந்து, வீடியோவைக் காண்பித்த பின்னர், தன் தவறை உணர்ந்த மாஜிஸ்ட்ரேட் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

மேலும், போலீஸார் இதற்காக அபராதச் செல்லாண் வழங்கினால் அதனைதான் கட்டத் தயாராக இருப்பதாக கூறினார். ஒரு சில அரசு அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ளமுடியவில்லை. இதில், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நீதித்துறையைச் சார்ந்த மாஜிஸ்ட்ரேட் இவ்வாறு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், போலீஸாரின் இந்த துணிச்சலான செயலுக்கு, அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. சட்டத்தின் பார்வையில் யாராக இருந்தாலும் ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








