இனி உங்கள் புதிய டூவீலர்களை பதிவு செய்ய இது கட்டாயம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை
புதிய இரு சக்கர வாகனங்களை பதிவு செய்வது தொடர்பாக அதிரடியான உத்தரவு ஒன்றை போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகமான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே இந்தியாவில் டூவீலர்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதிமுறையையும் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய இரு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வேண்டுமானால், 2 புதிய ஹெல்மெட்களை வாங்கியதற்கான ரசீதை காட்ட வேண்டும்.

புதிய இரு சக்கர வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் (RC-Registration Certificate) வழங்கும் முன்பாக, புதிய ஹெல்மெட்களை வாங்கியதற்கான ரசீதை அனைத்து ஆர்டிஓக்களும் சரிபார்க்க வேண்டும் எனவும் அம்மாநில போக்குவரத்து துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும்போதே இரண்டு புதிய ஹெல்மெட்களை வாங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக வாகன உற்பத்தியாளர்களுக்கு அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட்களை விற்பனை செய்ய வேண்டும்/வழங்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய பிரதேச மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்றதொரு உத்தரவு அங்கு கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது இந்த உத்தரவு பெரிதாக பின்பற்றப்படவில்லை. ஆனால் இம்முறை இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலமாக இரு சக்கர வாகன விபத்துக்களில் நிகழும் உயிரிழப்புகள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்புகின்றனர். மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு அங்கு சாலை விபத்துக்களால் 235 பேர் உயிரிழந்திருந்தனர். 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 248ஆக உயர்ந்தது. அதன்பின் வந்த 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 252 என மேலும் அதிகரித்தது. கடந்த 2018ம் ஆண்டு அங்கு சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327.


Click it and Unblock the Notifications








