ஹீரோ அச்சீவர் 150 பைக்கின் விற்பனை நிறுத்தப்படுகிறது?
ஹீரோ அச்சீவர் 150 பைக்கின் விற்பனை நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை காணலாம்.

ஹீரோ நிறுவனத்தின் அச்சீவர் 150 பைக் நீண்டகாலமாக மார்க்கெட்டில் இருந்து வரும் மாடல். கடந்த 2016ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட மாடல் களமிறக்கப்பட்டது. இந்த மாடலில் ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் என்ற எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்ப வசதியும் அளிக்கப்பட்டது.

இந்த பைக்கில் 149.2சிசி ஓஎச்சி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 13.4 பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 51.8 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹீரோ நிறுவனத்தின் 150சிசி ரக மாடல் என்பதால் வாடிக்கையாளர் மத்தியிலும் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. எனினும், ஹீரோ நிறுவனம் எதிர்பார்க்கும் அளவு விற்பனை இல்லை. இந்த செக்மென்ட்டில் பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் ஹோண்டா யூனிகார்ன் மாடல்களுக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கிறது.

இதனால், அதிக வாடிக்கையாளர் சேவை மையங்கள் இருந்தும் இந்த பைக்கிற்கு போதிய விற்பனையை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில், வரும் 1ந் தேதி முதல் 125சிசி ரகத்திற்கு மேலான பைக் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரையிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட அச்சீவர் 150 பைக் விற்பனைக்கு களமிறக்கப்படவில்லை. மேலும், இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தி அறிமுகம் செய்வதை ஹீரோ விரும்பவில்லை என்று பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இருப்பில் உள்ள அச்சீவர் 150 பைக்குகளை விற்பனை செய்வதற்கு மட்டுமே ஹீரோ திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் முதல் விற்பனையை நிறுத்துவதற்கான திட்டமும் ஹீரோ வசம் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியை அளித்தால் விலை உயர்த்த வேண்டி இருக்கும். அதற்கு முதலீடும் தேவைப்படும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அளித்தால் கூட இந்த பைக்கிற்கு எந்தளவு விற்பனை இருக்கும் என்ற சந்தேகத்தில் ஹீரோ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், ஒரு சில ஆண்டுகளில் அச்சீவர் 150 பைக்கிற்கு மாற்றாக முற்றிலும் புதிய 150 சிசி பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பைக்கில் 160சிசி திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications








