ரண களமாகபோகும் 2019-ன் இறுதி... புதிய ஆண்டில் இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு இதுதான்..!
2020ம் ஆண்டில் இந்தியர்களுக்கு புதிய ஆப்பு ஒன்று காத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் ஒரு புது விதமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு 2019ம் ஆண்டும் ஓர் அதிரடியான மாற்றத்தை இந்தியர்கள் மத்தியில் நிகழ்த்த இருக்கின்றது.
டிசம்பர் மாதம் என்றாலே இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் ஓர் விதமான அச்ச உணர்வு இருக்கின்றது. இதற்கு கடந்த வருடங்களின் டிசம்பர் மாதங்கள் ஏற்படுத்திய தீராத வடுக்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆனால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்தில் நிகழ உள்ள இந்த சம்பவம் அனைவராலும் அறிந்த ஒன்றே. அந்தவகையில், நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகள் மீதான விலையை கணிசமாக உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன.
இது ஒவ்வொரு வருடமும் அரங்கேறக் கூடிய ஓர் விஷயம் என்றாலும், இதனை இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, டிவிஎஸ் நிறுவனம் 2020ம் ஆண்டிற்கான புதிய விலைப் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் அதன் பங்காக விலை உயர்வுகுறித்த தகவலை வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சி வைத்தியத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பால், அடுத்த ஆண்டு முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் ரூ. 2 ஆயிரம் முதலான விலையுயர்வைப் பெறவிருக்கின்றன. இந்த விலையுயர்வு மாற்றம் எக்ஸ்-ஷோரூமிலிருந்தே செய்யப்பட உள்ளது. இது மாநிலம் மற்றும் நகரம் வாரியாக மாற்றமடைந்து காணப்படும்.

இந்த திடீர் விலையுயர்வுக்கான காரணம் பற்றிய தகவலை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. இருப்பினும், வருடம் ஒரு முறை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் விலையுயர்வின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை ஹீரோ மேற்கொண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ள புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாகs வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகள் மீது விலையை உயர்த்தி வருகின்றன. அதேசமயம், இந்த விலையுயர்வு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகமாக காணப்படும் என கூறப்படுகின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அதன் பிஎஸ்-6 தரத்திலான ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கை அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய தரத்திலான வாகனங்களின் அறிமுகத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹீரோ நிறுவனம் போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, முதல் பிஎஸ்-6 மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன், விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட மாடல் பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களின் உற்பத்தியை ஹீரோ நிறுவனம் நிறுத்தியது. மேலும், அந்த மாடல்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியையும் அது மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே, இந்திய வாகனச் சந்தை கடுமையான விற்பனைச் சரிவைச் சந்தித்து வருகின்றது. இருப்பினும், கடந்த விழாக் காலங்களை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சலுகையின் காரணமாக கணிசமான விற்பனை வளர்ச்சியை ஒரு சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு வருவதால், அனைத்து வாகனங்களின் விலையும் கடுமையாக உயரவிருக்கின்றது. இது இந்திய வாகனச் சந்தையை எத்தகைய சூழலுக்குக் கொண்டு செல்லும் என்பது இதுவரை அறிய முடியாத புதிராக உள்ளது. இருப்பினும், புதுப்பிப்பலுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதால் இதுகுறித்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் விரைவில் வெளிவர காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








