ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க பைசூரன்ஸ் திட்டத்தை தொடங்கிய ஹீரோ!
இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ நிறுவனம், அதன் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க பைசூரன்ஸ் எனப்படும் பைபேக் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், பைபேக் (BuyBack) எனப்படும் சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பைபேக் சலுகையை அந்த நிறுவனம் பைசூரன்ஸ் (BuySurance) எனும் பெயரில் துவங்கி வைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஹீரோவின் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.

அதில், ஸ்கூட்டரை ஐந்து வருடங்களுக்கு உள்ளாக விற்க முற்பட்டால் குறிப்பட்ட மதிப்பீட்டில் அதனை ஹீரோ நிறுவனமே திரும்பப் பெற்றுக்கொள்ள, அந்த சான்றிதழ் வழிவகுக்கும்.
ஹீரோ நிறுவனம் தற்போது இந்தியாவில் நான்கு ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், ப்ளஸ்ஸர், டூயட், மேஸ்ட்ரோ மற்றும் டெஸ்ட்டினி 125 ஆகிய நான்கு மாடல் ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. மேலும், இரண்டு புதிய மாடல் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணியில் ஹீரோ ஈடுபட்டு வருகின்றது.

அவ்வாறு, இன்னும் ஓரிரு வாரங்களில் மேஸ்ட்ரோ எட்ஜ் என்னும் புதிய மாடல் அறிமுகமாக இருக்கின்றது. மற்றுமொரு புதிய மாடல் குறித்த அதிகார்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வாறு, ஹீரோ நிறுவனம், அதன் ஸ்கூட்டர் வரிசையில் பல்வேறு தரத்திலான மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இருப்பினும் இவை ரீசேல் உள்ளிட்ட சில சிக்கலான காரணங்களால், போதியளவில் விற்பனையைப் பெறுவதில்லை என கூறப்படுகிறது. ஆகையால், ஸ்கூட்டர்களை தாங்களே நல்ல ரீசேல் வேல்யூவில் எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த திட்டத்தினை ஹீரோ நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது.

இதனால், இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் கணிசமான விற்பனை அதிகரிப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த வித்தியாசமான முயற்சியானது, இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்கூட்டர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ நிறுவனத்தின் இந்த சலுகையானது, அந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கும் டீலர்களிடம் வாங்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. அதேபோன்று, அதற்கான சான்றையும் அந்த நிறுவனம் சிஆர்இடிஆர்-இன் மூலம் வழங்க இருக்கின்றது.

இந்த சிஆர்இடிஆர் அமைப்பானது ஸ்கூட்டரின் மதிப்பை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மதிப்பிட்டு அந்த சான்றில் பதிவு செய்யும். இவ்வாறு, ஐந்து வருடங்களுக்கான ஸ்கூட்டரின் மதிப்பை அந்த நிறுவனம் சான்றில் பதிவு செய்யும். ஆகையால், ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர், ஸ்கூட்டர் எந்த கன்டிஷனில் இருந்தாலும், அதனை குறிப்பிட்ட வேல்யூவில் ஹீரோ நிறுவனத்திடம் திரும்ப விற்றுக் கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடங்கப்பட்டுள்ற இந்த புதிய திட்டத்தினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், முன்னதாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, புது டெல்லி மற்றும் பெங்களூருவில் இந்த திட்டம் இரண்டாம் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தினை இந்தியாவில் உள்ள பத்து முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








