ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் கூடுதல் கவனம் செலுத்த ஹீரோ திட்டம்... ஹோண்டாவிற்கு சவால் அளிக்க முடிவு...
இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் கூடுதல் கவனம் செலுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் புது டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்ந்து கொண்டுள்ளது.

இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டிற்கான தனது யுக்திகளில் ஹீரோ மோட்டோகார்ப் சில மாற்றங்களை செய்யவுள்ளது. இனி இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹீரோ மோட்டோகார்ப் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ப்ளஷர் ப்ளஸ் ஆகிய 2 ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில்தான், இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் தனது இருப்பை விரிவாக்கம் செய்து கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 11 சதவீதம் மட்டுமே என ET Auto வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் 719,087 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டில் இன்னும் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

இது ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தை வலுவாக எதிர்கொள்ளும் ஓர் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டின் ராஜாவாக ஹோண்டா திகழ்ந்து வருகிறது.

55 சதவீத மார்க்கெட் ஷேரை அந்நிறுவனம் தனது கையிருப்பில் வைத்து கொண்டு தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் தனது புதிய திட்டத்தின் மூலம் ஹோண்டாவிற்கு சவால் அளிக்க முடியும் என ஹீரோ மோட்டோகார்ப் கருதுகிறது.

மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ப்ளஷர் ப்ளஸ் 110 என இரண்டு புதிய மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் களமிறக்கியுள்ளது. இதில், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலின் ஆரம்ப விலை 58,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அதே சமயம் ப்ளஷர் ப்ளஸ் 110 மாடலின் ஆரம்ப விலை ரூ.47,300. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த இரண்டு ஸ்கூட்டர்கள் தவிர, 3 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களையும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகியவைதான் அந்த மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்கள். இதில், எக்ஸ்பல்ஸ்200தான் ஹீரோ நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர்-டூரர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போதைய நிலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான அட்வென்ச்சர்-டூரர் மாடலும் இதுவே. மறுபக்கம் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலானது, இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் ஃபேர்டு வெர்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








