அறிமுகத்திற்கு முன்னரே ஹீரோ ஸ்பிளெண்டர் பிஎஸ்-6 பைக் பற்றிய முக்கிய தகவல் கசிவு...
விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பிஎஸ்-6 பைக்கின் எஞ்ஜின் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்...

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஜாம்பவான செயல்பட்டு வரும் ஹுரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கினை பிஎஸ்-6 தரத்தில் தயாரிப்பதற்கான சான்றை சமீபத்தில் பெற்றது.
ஆகையால், விரைவில் ஹுரோ நிறுவனம், ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கினை பிஎஸ்-6 எஞ்ஜின் தரத்துடன் இந்தியாவில் விற்பனைச் செய்ய உள்ளது. இந்த தரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் பைக் இதுவே ஆகும்.

இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த சிறப்பு வாய்ந்த பைக்குறித்த ஒரு சில முக்கிய ஆவணங்கள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஐஏபிஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள் அனைத்தும் ஹீரோ நிறுவனத்தின்மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இருப்பினும், பைக்கின் விற்பனை அறிமுகத்திற்கு முன்னரே அதுகுறித்த தகவல்கள் சில இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, தற்போது கசிந்துள்ள ஆவணம், பிஎஸ்-6 தரத்திலான ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கின் எஞ்ஜின் திறன் மற்றும் டைமன்ஷன் போன்றவற்றின் தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
புதிய மாசு உமிழ்வு விதி பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதால், பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜினையுடைய ஸ்பிளெண்டர் பைக்கின் திறன் சற்றே குறைந்துள்ளது.

113.2 சிசி திறனை வெளிப்படுத்தும் ஏர் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அதுவே, பழைய 109.15 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் அதிகபட்சமாக 9.3 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். எனவே, இந்த பழைய எஞ்ஜினைக் காட்டிலும் புதிய எஞ்ஜின் 0.3 பிஎச்பி பவரை குறைவாகவே வெளிப்படுத்துகின்றது.

மாசினை குறைவாக வெளிப்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய மாற்றத்தை ஹீரோ நிறுவனம், பிஎஸ்-6 தரத்திலான ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கில் செய்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையால் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக் தற்போது வழங்கும் மைலேஜைக் காட்டிலும் சற்று அதிகமான மைலேஜை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்ப வகையில், கார்புரேட் அமைப்பு மற்றும் ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பத்தை இதன் எஞ்ஜின் பெற்றிருக்கின்றது.

இந்த மாற்றங்கள் குறித்த தகவலைதான் தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பைக்கின் பரிமாண மாற்றத்தையும் அது வெளிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், பைக்கின் வீல் பேஸ் 25 மிமீ முதல் 1,270 மிமீ வரை அதிகரிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. அதேபோன்று, நீளம் மற்றும் உயரத்தின் அளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பைக்கின் பிரேக்கிங் வசதியிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை தற்போது வெளியாகியுள்ள தகவல் உறுதி செய்கின்றது.
அந்தவகையில், தற்போது விற்பனையில் உள்ள ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கில் காணப்படும் டிரம் பிரேக் தேர்வு டிஸ்க் பிரேக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்வு முன்பக்க வீலுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது, வாடிக்கையாளரின் விருப்ப தேர்வின்படி, பின் வீலுக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆகையால், அதற்கு முன்னதாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும், அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே, ஹீரோ நிறுவனம், ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கினை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

இந்த புதிய பைக் நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது, சற்று விலையுயர்வை அது பெறலாம் என கூறப்படுகின்றது. இந்த விலையுயர்விற்கு தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களே முக்கிய காரணமாக அமைகின்றன.
எனவே, தற்போது விற்பனயில் இருக்கும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கைக் காட்டிலும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விலையுயர்வை அது பெற உள்ளது.


Click it and Unblock the Notifications








