இந்தியாவின் 150 - 400 சிசி செக்மெண்ட்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய ஹீரோ நிறுவனம் திட்டம்...
இந்தியாவின் 150 - 400 சிசி செக்மெண்ட்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). புது டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது, உலகிலேயே மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவின் 200 சிசி செக்மெண்ட்டில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆஃப் ரோடு அட்வென்ச்சர் மாடலான எக்ஸ்பல்ஸ் 200, அதன் டூரிங் வெர்ஷனான எக்ஸ்பல்ஸ் 200டி, மற்றும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலின் ஃபுல்லி ஃபேர்டு வெர்ஷனான (Fully Faired Version) எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகியவைதான் அந்த மூன்று மாடல்கள்.

இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 150 சிசி - 400 சிசி செக்மெண்ட்டில் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் ஆஃப்டர்சேல்ஸ் பிரிவின் தலைவர் சஞ்சய் பான் கூறுகையில், ''150 சிசி முதல் 400 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட சில மோட்டார்சைக்கிள் மாடல்களை வரும் ஆண்டுகளில் நாங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளோம்'' என்றார். இதுகுறித்து ET Auto செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த மோட்டார்சைக்கிள்களின் பெயர் என்ன? அவை சரியாக எப்போது இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும்? என்பது போன்ற தகவல்களை எதையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. ஆனால் விரிவாக்கத்திற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் 1,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கு ஏதுவாக இந்தியாவில் உள்ள தனது டீலர்ஷிப்களுக்கு புத்துயிர் ஊட்டவும் ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹீரோ எக்ஸ்எஃப்3ஆர் (Hero XF3R) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஹீரோ எக்ஸ்எஃப்3ஆர் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இதன் புரொடெக்ஸன் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 300 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும்.

அத்துடன் அதே நிகழ்ச்சியில், 300 சிசி கரிஷ்மா ஸ்போர்ட்ஸ் பைக்கின் புரோட்டோடைப் மாடலையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








