பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதன் பொருட்டு, வாகனங்களின் எஞ்சின்களை குறைவான மாசு வெளிப்படுத்தும் விதத்தில் வாகன நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட புதிய எஞ்சினுடன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வரும் 12ந் தேதி முதல் பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா அழைப்பிதழில் தெரிவித்துள்ளது.

அது நிச்சயமாக பிஎஸ்-6 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர்தான் என்று ஆட்டோமொபைல் துறையினரால் நம்பப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில், இதுதான் இந்தியாவின் முதல் பிஎஸ்-6 ஸ்கூட்டர் மாடலாகவும் இருக்கும்.

இது ஆறாம் தலைமுறை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் என்பதும் மற்றொரு முக்கிய விஷயம். வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் கவர்ச்சிகர அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.

இந்த ஸ்கூட்டரின் 110சிசி எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், குறைவான மாசு உமிழ்வு, அதிக எரிபொருள் சிக்கனத்தை இந்த புதிய ஆக்டிவா மாடல் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். ஸ்மார்ட்போனை இணைத்து நேவிகேஷன் வசதியை இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மூலமாக பெறும் வாய்ப்பும் இருப்பதாக தெரிய வருகிறது.

இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல் ஹோண்டா ஆக்டிவா. இதில், ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருவது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








