வரலாற்றில் இதுவே முதல் முறை... ஹோண்டா நிறுவனம் உற்பத்தியை குறைக்க காரணம் இதுதான்...
ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமானது, (Honda Motorcycle and Scooter India-HMSI) நாட்டின் முதன்மையான டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பேஸிக் கம்யூட்டர் மோட்டார் சைக்கிள் முதல் சூப்பர் பைக் வரை பல்வேறு விதமான இரு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்து கொண்டுள்ளது.

ஆனால் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கை ஸ்கூட்டர்களில் இருந்துதான் வருகிறது. இதற்கு காரணம் ஆக்டிவாதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமை கடந்த பல ஆண்டுகளாக ஆக்டிவாவிடம்தான் உள்ளது. இதுதவிர ஹோண்டா நிறுவனத்தின் டியோ, ஏவியேட்டர் மற்றும் க்ராஸியா உள்ளிட்ட ஸ்கூட்டர்களின் விற்பனையும் கணிசமாக உள்ளது.

இன்னும் சொல்வதென்றால், கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்த மொத்த இரு சக்கர வாகனங்களில் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 66 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹோண்டா நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 38 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இத்தனைக்கு இந்தியாவின் ஸ்கூட்டர் மார்க்கெட் சரிவடைந்து கொண்டிருக்கும் சூழலிலும் ஹோண்டா நிறுவனம் இதனை செய்து காட்டியது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட் சரிவடைய தொடங்க விட்டது. அப்போது இன்சூரன்ஸ் தொகைகள் அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக ஸ்கூட்டர்களின் விலை கணிசமாக அதிகரித்தது.

இதன் தாக்கம் ஸ்கூட்டர் விற்பனையில் எதிரொலித்தது. இது போதாதென்று எரிபொருள் விலை வேறு கடுமையாக உயர்ந்தது. இது போன்ற காரணங்களால் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் மந்தமடைய தொடங்கியது. இந்த சூழலில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2019) டூவீலர்களின் விற்பனை இன்னும் மந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன் விளைவாக இரு சக்கர வாகனங்களின் விலை சற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இரு சக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் சற்று குறையலாம். இதில், ஸ்கூட்டர்களும் அடக்கம். ஹோண்டா நிறுவனத்தின் கணிப்பும் கிட்டத்தட்ட இதேபோல்தான் உள்ளது.

எனவே நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது இரு சக்கர வாகனங்களின் உற்பத்தியை 15-20 சதவீதம் வரை குறைத்து விட ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை கடந்த 2001ம் ஆண்டு தொடங்கியது. அப்போதில் இருந்து பார்த்தால், ஒரு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹோண்டா நிறுவனம் உற்பத்தியை குறைப்பதும் இதுவே முதல் முறை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: LiveMint


Click it and Unblock the Notifications








