இந்தியாவில் 5 புதிய பிரிமீயம் பைக்குகளை களமிறக்கும் ஹோண்டா!
இந்தியாவில் 5 புதிய பிரிமீயம் பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. பட்ஜெட் மார்க்கெட் முதல் பிரிமீயம் மார்க்கெட் வரை ஹோண்டா நிறுவனம் பல்வேறு ரகங்களில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

பட்ஜெட் பைக்குகளை சாதாரண ஷோரூம்கள் வாயிலாகவும், விலை உயர்ந்த பைக்குகளை பிக் விங் என்ற பெயரிலான ஷோரூம்கள் வாயிலாகவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக, 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிக் விங் பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

தற்போது பிக் விங் ஷோரூம் வாயிலாக 7 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை 13 பைக்குகளாக அதிகரிக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இந்த புதிய மாடல்களை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பைக் மாடல்கள் 300 சிசி முதல் 1,800 சிசி வரையிலான திறன் கொண்டதாக இருக்கும். ஹோண்டா சிபி300எக்ஸ் முதல் கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் வரை இந்த பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. ஐக்மா கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு பைக் மாடல்களும் அடுத்த ஆண்டு இந்தியா வர இருக்கின்றன.

மேலும், விலையை சவாலாக நிர்ணிக்கும் விதத்தில், இதில் சில மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. எனினும், கோல்டுவிங் உள்ளிட்ட விற்பனையில் குறைவான எண்ணிக்கையை உடைய விலை உயர்ந்த மாடல்கள் தொடர்ந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

புதிய பைக்குகளின் வருகைக்கு தக்கவாறு, தனது பிக் விங் ஷோரூம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 75 நகரங்களில் பிக் விங் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் மூலமாக சேவை வழங்குவதற்கும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








