கண்காட்சியில் அனைவரையும் ஈர்த்த ஹோண்டாவின் புதிய பேட்டரி ஸ்கூட்டர்: கூடுதல் விவரங்கள்!
ஹோண்டா நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

தெற்கு சீனாவின் ஷாங்காய் மாகணத்தில் வாகனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி இம்மாதம் 25ம் தேதி வரை நடைபெறும். சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சியில், பல முன்னணி நிறுவனங்கள், அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, அதன் புத்தம் புதிய மாடல் வி-கோ எனப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இதில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உயாங்-ஹோண்டா மோட்டார்சைக்கிள் (குவான்சுஹூ) என்ற சீன நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா உருவாக்கியுள்ளது.

முழுக்க முழுக்க நகர பயன்பாட்டைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோண்டாவின் வி-கோ எலக்ட்ரிக் ஸகூட்டரில் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் 40 முதல் 60 கிமீ தூரம் வரை செல்லலாம்.

ஹோண்டா சீனா மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புத்தம் புதிய வி-கோ தான் அந்த நிறுவனத்தின்மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் மின்வாகனமாகும். இந்த வி-கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி மற்றும் எஞ்ஜின் ஆகியவை வாகனத்தின் கிராவிட்டியை எந்தவிதத்திலும் பாதிக்காத வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஸ்கூட்டரின் நடுப்பகுதியில் வாகன ஓட்டி கால் வைக்கும் இடத்தில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை கன்ட்ரோலாக ஓட்டவும் ஸ்டெபிலிட்டிக்கும் உதவும். மேலும், இந்த பேட்டரிகள் அதிக சார்ஜ் மற்றும் ஷார்ட் சர்க்யூட் உள்ளிட்ட பிரச்னைகளில் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், பேட்டரியைச் சுற்றிலும் அலுமினியம் அலாய் சுற்றப்பட்டுள்ளது. இது, திடீர் விபத்துகளில் இருந்து காக்க உதவும்.

ஸ்கூட்டரின் மின் மோட்டாரானது, பின்பக்க சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 60-80 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதேசமயம், இதன் ஸ்டைலைப் பார்த்தோமானால், காம்பேக்ட் டிசைனில், ஒல்லி மற்றும் ஆடம்பரமில்லாத தோற்றத்தில் வடிமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, இதன் முகப்பு பகுதியில் இன்டெக்ரேடட் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்கூட்டரில் சிபிஎஸ் எனப்படும் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.

இதைத்தொடர்ந்து, நவீன வசதிகளாக ஜிபிஎஸ், இன்டெலிஜென்ட் லிங்கேஜ் ஆப் மற்றும் ஸ்மார்ட் கீ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் மூலம் ஸ்கூட்டர் திருடு போவது தடுக்கப்படுவதுடன் வாகனத்தின் செயல்பாட்டுகளை ஸ்மார்ட்போன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும்.

ஹோண்டாவின் இந்த புத்தம் புதிய வி-கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய மதிப்பில் ரூ.82,971 என்ற விலையில் சீனாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், தற்போது இந்தியாவில் மின்வாகனங்களின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால், கூடிய விரைவில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








