நீண்ட இழுத்தடிப்பிற்கு பின் ஒரு வழியாக தொடங்கியது ஜாவா டெலிவரி... முதல் பைக்கை பெற்றது இவர்தான்...
நீண்ட இழுத்தடிப்பிற்கு பின் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி இன்று (மார்ச் 30) தொடங்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜாவா மோட்டார் சைக்கிள்கள், இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதியன்று, ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் லான்ச் செய்யப்பட்டன. இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் அன்றைய தினமே ஆன்லைன் மூலம் தொடங்கியது.

முன்னதாக விழா மேடையில் ஜாவா பெராக் என்ற மோட்டார் சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் ஜாவா பெராக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. நடப்பாண்டின் இறுதியில்தான் ஜாவா பெராக் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனிடையே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களுக்கு ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர்.

ஆனால் டெலிவரி தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு கொண்டே வந்தது. ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களின் டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்ற உறுதியான தகவல் வெளியிடப்படாததால் புக்கிங் செய்திருந்த வாடிக்கையாளர்கள் வெறுப்படைந்தனர். ஆனால் இன்று (மார்ச் 30) ஜாவா பைக்குகளின் டெலிவரி தொடங்கப்பட்டு விட்டதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் முதல் ஜாவா பைக் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியான ஆனந்த் என்பவர் மூலமாக வீரேந்தர் சிங் என்ற வாடிக்கையாளருக்கு முதல் பைக் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாவா வெப்சைட் அடிப்படையில் பார்த்தால் இந்தூரில் அவர்களுக்கு ஒரே ஒரு டீலர் (மெஹ்தா ஆட்டோமொபைல்ஸ்) மட்டுமே உள்ளார்.

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் டூவீலர் பிளாண்ட்டில் இருந்து 29 கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்த டீலர்ஷிப் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஞ்சிய நகரங்களில் டெலிவரி தொடங்கி விட்டதா? என்பது தெரியவில்லை. அதேபோல் நடப்பு மார்ச் மாதத்தில் எவ்வளவு பைக்குகள் டெலிவரி செய்யப்படும்? என்ற தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் அடுத்த மாதத்தில் (ஏப்ரல்) டெலிவரி பெறவுள்ள வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31ம் தேதியன்று தகவல் தெரிவிக்கப்படும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பின் ஜாவா பைக்குகளின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட தாமதம்தான் என்றாலும் டெலிவரி தொடங்கியுள்ளதால், அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 293 சிசி, லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு 350 பைக்குகளுக்கு நேரடி போட்டியாக ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய 2 பைக்குகளும் களமிறக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஜாவா பெராக் பைக்கில் சற்றே பெரிதான 334 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30.4 பிஎஸ் பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வழங்கும். இந்த இன்ஜினிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டது.

முன்னதாக உயிர் தியாகம் செய்த இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று (மார்ச் 29) நடைபெற்றது. இதில் மொத்தம் 13 ஜாவா பைக்குகள் ஏலம் விடப்பட்டன. இதன்மூலம் 1.43 கோடி ரூபாய் நிதி திரட்டப்படவுள்ளது. உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவிற்கு இந்த தொகை வழங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








