ஜாவா கொடுக்கும் மரண அடியை தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் ராயல் என்பீல்டு... இனி அவ்வளவுதானா?
ஜாவா கொடுக்கும் மரண அடியை தாக்கு பிடிக்க முடியாமல் ராயல் என்பீல்டு திணறி வருகிறது. போகிற போக்கை பார்த்தால் ராயல் என்பீல்டின் கதை முடிந்து விடும் போல் தெரிகிறது.

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஜாவா மோட்டார் சைக்கிள்கள், இந்திய மார்க்கெட்டில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம்தான் ஜாவா மோட்டார் சைக்கிள் இந்தியாவில் ரீ லான்ச் ஆனது.

ஜாவா மோட்டார் சைக்கிள்கள், ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக திகழ்கின்றன. எனவே ஜாவா மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் ஆனது முதல், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது.

இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜனவரி மாத சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் சரிவை சந்தித்துள்ளதால், ராயல் என்பீல்டு நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதற்கு ஜாவாவின் வருகையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி என மொத்தமாக 72,701 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் 77,878 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 7 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை என்கிற அளவில் மட்டும் பார்த்தாலும் ராயல் என்பீல்டு நிறுவனம் 7 சதவீத அளவிற்கு சரிவை கண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 70,872 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 76,205 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து தள்ளியிருந்தது. எனவே உள்நாட்டு விற்பனையிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் 7 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் ஒரே ஒரு விஷயம் ஏற்றுமதிதான். ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி 9 சதவீதம் என்கிற அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1,829 மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,673 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்திருந்தது. இது 9 சதவீத வளர்ச்சியாகும். இருந்தாலும் உள்நாட்டு விற்பனை மற்றும் ஒட்டுமொத்த விற்பனை சரிவை சந்தித்திருப்பதற்கு ஜாவாவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








