புக்கிங் செய்த 10 நாட்களில் பைக் டெலிவிரியா? - பதறிப் போய் விளக்கம் அளித்த ஜாவா!
ஜாவா பைக்குகளை புக் செய்தால் 10 நாட்களில் டெலிவிரி பெற முடியும் என்று வெளியான செய்திக்கு ஜாவா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது . அத்துடன் உண்மையான காத்திருப்பு காலம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது.

ஜாவா பைக்குகளுக்கான டெலிவிரி காலம் 10 நாட்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக கடந்த வாரம் ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் செய்தி வெளியானது. ஜாவா பைக்கை புக்கிங் செய்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது ஜாவா பைக் முன்பதிவு செய்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், ஜாவா பைக்குகளை புக்கிங் செய்து 10 மாதங்களுக்கும் மேலாக பலர் காத்திருக்கும் நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜாவா நிறுவனத்தை பலர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கத் துவங்கியதுடன், சமூக வலைத்தளங்களிலும் பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில், அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாவா விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதில், ஜாவா பைக்குகளின் காத்திருப்பு காலம் 10 நாட்களாக தடாலடியாக குறைந்திருப்பதாக வெளியானத் தகவல் முற்றிலும் தவறானது. வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரந்து கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் ஜாவா பைக்குகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். இதனால், 10 மாதங்கள் வரை இருந்த காத்திருப்பு காலம் இப்போது 5 மாதங்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று ஜாவா நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜாவா பைக்கை புக்கிங் செய்து காத்திருப்பவர்கள் அமைதியடைந்துள்ளனர். மேலும், புதிய ஜாவா பெராக் பைக் அடுத்த ஆண்டு ஏப்ரலில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அந்த பைக்கிற்கான முன்பதிவு ஜனவரியில் துவங்கப்பட இருக்கிறது.

இதனால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளின் உற்பத்தியில் ஏதேனும் பாதிப்பு வருமா என்ற சந்தேகமும் நிவர்த்தியாகி இருக்கிறது. அதாவது, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய பைக்குகள் ஒரு உற்பத்திப் பிரிவிலும், பெராக் பைக் மற்றொரு பிரிவில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும்.

இதன் காரணமாக, உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என்பதுடன், பெராக் பைக் வரும்போது உற்பத்தியை சீராக வைத்திருக்க வேண்டிய திட்டங்களையும் ஜாவா கையில் வைத்துள்ளது. எனவே, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளை முன்பதிவு செய்தவர்கள் 5 மாதங்களில் டெலிவிரி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் 27 எச்பி பவரை வழங்கும் 293சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெராக் பைக்கில் 30 எச்பி பவரை அளிக்க வல்ல 334 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கிறது. அதேபோன்று, ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் 293 சிசி எஞ்சினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








