டீலர்ஷிப்பின் பெயரில் மோசடி... வாடிக்கையாளர்களை எச்சரிக்கைப்படுத்திய ஜாவா மோட்டார்ஸ்
இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களை மோசடியாளர்களிடம் இருந்து கவனமாக இருக்கும்படி எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் ஃபேஸ்புக் போன்ற அதன் சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

ஜாவா நிறுவனம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஜாவா மற்றும் ஜாவா 42 என்ற இரு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியிருந்தது. மக்கள் மத்தியில் இந்த பைக்குகள் மிக பெரிய அளவில் பிரபலமாகின.

இந்த பைக்குகள் அறிமுகமான நேரத்தில் ஆயிரக்கணக்கில் முன்பதிவுகள் நடந்தன. இதனால் பைக்கிற்கான காத்திருப்பு காலத்தை சுமார் 6-8 மாதங்கள் வரை அதிகரித்தது, ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்.

ஒருபுறம் வாடிக்கையாளர்கள் பைக்கிற்காக காத்திருக்க, மறுபுறம் புதிய பைக்குகளை தயாரித்துகொண்டே இந்தியா முழுவதும் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த 4 மாதங்களில் ஜாவா மோட்டார்ஸின் இந்திய டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டது.

இதையெல்லாம் பார்த்த வாடிக்கையாளர்கள், ஜாவா நிறுவனம் தான் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை விரிவாக்க இவ்வாறு காத்திருக்க வைக்கிறது என நினைத்து கொண்டனர். இந்த நிலையில், ஜாவா டீலர்ஷிப் திறப்பது தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது, ஜாவா பைக் நிறுவனத்தை நடத்தி வரும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சில மோசடி பேர்வழிகள் டீலர்ஷிப் உரிமை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜாவா பைக் டீலர்களை திறக்க விரும்புவோர் மோசடியாளர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. டீலர்ஷிப் திறக்க விரும்புவோர் பதிவு மற்றும் பணத்தை பரிமாறுவதற்கு ஜாவா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளப்பக்கம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. இந்த இணையத்தளப்பக்கம் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

ஜாவா நிறுவனத்தின் இந்த எச்சரிக்கைக்கு முக்கிய காரணம் மக்களை மோசடியாளர்களிடம் இருந்து அவர்களது விருப்பத்துடன் வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே ஆகும். இந்த விஷயம் இன்னும் எந்தவொரு மீடியாவிலும் வெளிவரவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மோசடியாளர்களிடம் சிக்கியிருந்தாலோ அல்லது அதுபோன்ற மோசடியாளர்களை கண்டாலோ விபரம் தெரிவிக்க இமெயில் ஐடி ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தங்களது வாடிக்கையாளர்களை ஒரு முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனம் எச்சரிப்பது இதுவே முதன்முறை. இந்தியா போன்ற நாட்டில், மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அதில் மோசடி செய்வது மிக எளிது. அது தான் ஜாவா மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப் விஷயத்திலும் நடந்துள்ளது.

ஜாவா நிறுவனம் சமீபத்தில் தான், டீலர்கள் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு உரிமங்கள் ஒப்படைக்கப்படும் என கூறியிருந்தது. ஆனால் சில பண வலிமையுள்ளவர்கள் இந்த நிபந்தனைகளை மதிக்காமல் பணத்தின் மூலம் எளிதாக உரிமங்களை வாங்கி விடுகின்றனர். மேலும் சிலரோ இந்த வாடிக்கையாளர்களின் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணம் சம்பாதித்து விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications








