ஜாவாவின் புதிய அறிவிப்பு: இம்முறையாவது டெலிவரி கிடைக்குமா? வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டுவிட்..!
ஜாவா மற்றும் ஜாவா42 ஆகிய மாடல்களின் டெலிவரி குறித்த அறிவிப்பை ஜாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இம்முறையாவது குறிப்பிட்ட தேதிக்குள் டெலிவரி செய்யுமா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 1970ம் ஆண்டு ஜாவா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. களமிறக்கப்பட்ட சில நாட்களிலேயே இதன் பைக்குகள் பெருமளவில் வரவேற்பைப் பெற்று பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஜாவா நிறுவனம் தற்போது மீண்டும் தனது புத்தம் புதிய மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் களமிறக்கியுள்ளது.
பாரம்பரியமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ள ஜாவா பைக்கிற்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன் கவர்ச்சிகரமான தோற்றம், ஸ்டைல் ஆகியவற்றின் தீராத மோகம் கொண்ட சிலர் ஜாவா பைக் ஆரம்ப காலகட்டத்தில் விற்பனைச் செய்த மோட்டார்சைக்கிளைக் கூட தற்போது வரை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், ஜாவா நிறுவனம் தனது புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள்களின் மூன்று மாடல்களை இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்தது. மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மூலம் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களை ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்தது.
ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் உருவத்தில் வேற்றுமைக் கொண்டிருந்தாலும், அதன் எஞ்ஜின்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. ராயல் என்பீல்டு பைக்கிற்கு போட்டியாக இந்த மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த பைக்கில் உள்ள அதேகெபாசிட்டி கொண்ட எஞ்ஜின்கள் இந்த பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
அவ்வாறு, ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிளில் 293சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு DOHC எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் முக்கிய அம்சாமாக இரட்டை குழல் கொண்ட லைசென்சர் பொருத்தப்பட்டுள்ளது.

ஜாவா பெராக்கில் அதிக சக்தி வாய்ந்த எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அவ்வாறு, 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும் பெராக் பைக்கில் 334சிசி கொண்ட லிக்யூடு கூல்டு DOHC எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 பிஎச்பி பவரையும் 31என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய பைக்குகளுக்கான புக்கிங் ஆன்லைனில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த புக்கிங்கில், பலர் போட்டிப்போட்டுக் கொண்டு முன் பணம் செலுத்தினார்கள். இவ்வாறு வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டு புக் செய்ததால், தயாரிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் மிக விரைவாகவே புக்காகியது. இதனால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கும் முடிந்துவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
மேலும், பைக்கை புக்கிங் செய்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் டெலிவரி வழங்கப்படும் என ஜாவா முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் டெலிவரி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதையடுத்து, ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார் சைக்கிள்களை ஏப்ரல் மாதத்திற்குள் டெலிவரி செய்ய இருப்பதாக ஜாவா சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜாவா மற்றும் ஜாவா42 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் மார்ச் மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் அனுபம் தரேஜா, அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
கிளாசிக் லெஜன்டஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஜாவா பிரியர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதற்கு முன்னதாக ஜாவா நிறுவனம் இதேபோன்று டெலிவரி குறித்து அறிவித்துவிட்டு, இழுபறி செய்தததால் இம்முறையும் ஏமாற்றப்படுவோமோ என்ற கலக்கத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதேபோன்று, ஜாவா பெராக்கின் விற்பனைக் குறித்த தகவலையும் ஜாவா நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, இந்த வருடம் இறுதிக்குள் பெராக் மீதான புக்கிங் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் களமிறங்கும் பெராக் பைக்கிற்கு கருப்பு நிற மேட் பினிஷிங் பெயிண்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கவர்ச்சியை மேலும் கூட்டும் விதமாக கோல்ட் நிற ஹைலைட்டை பக்கவாட்டு பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கில் அடிக்கப்பட்டுள்ளது.
ஜாவா பெராக் சக்திக்கேற்ப அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கிறது. ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சாலை பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்றவாரு ஏபிஎஸ் பிரக்கிங் வசதியுடன் உருவாகியுள்ள இந்த பைக்குகள் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் ஓர் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








