போலீஸை ஏமாற்ற இளைஞர் செய்த தந்திரம்... ஆனா, இப்புடி மாட்டிக்கிட்டியே குமாரு...
மைசூரைச் சேர்ந்த இளைஞர் போலீஸாரின் அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காக கையாண்ட யுக்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தில், முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் புதுவிதமான யுக்தியைக் கையாண்டு வருகின்றனர்.

அந்தவகையில், முன்பு சொந்த வாகனங்களை இயக்கி வந்த மக்கள் தற்போது பொது வாகனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஒரு சிலரோ ஓலா, ஊபர் மற்றும் வோகோ போன்ற வாடகை வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் போலீஸாரின் கெடுபிடியில் இருந்து தப்பிப்பதற்காக மாற்று வழி ஒன்றை கையாண்டுள்ளார். இதற்காக அவர் பயன்படுத்திய யுக்தி போலீஸ் வட்டாரத்தையே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.

குவெம்பூநகர் பகுதியைச் சேர்ந்தவர் டி. சந்துரு. இவர், கேஏ 09 எச்ஜே 0597 (KA-09 HJ-0597) என்ற பதிவெண் கொண்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டரைப் பயன்படுத்தி வருகின்றார். அண்மையில், மைசூர் நகரப் போக்குவரத்து போலீஸார், கேஏ 09 எச்ஜே 0597 பதிவெண் கொண்ட இவரது வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி 39 அபராத செல்லாண்களை அனுப்பி வைத்தனர்.

இதனைக் கண்டு அதிர்ந்துபோன சந்துரு, தான் எந்தெவொரு விதிமீறலிலும் இதுவரை ஈடுபட்டதில்லை என கூறி மறுப்பு தெரிவித்தார். மேலும், அதுகுறித்து அந்நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து மேலாண்மை பிரிவில் முறையிட்டர்.
சந்துருவின் மறுப்பை அடுத்து, அவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் ஆராய்ந்தனர்.

அப்போது, போலீஸார் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கின்ற அந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதில், சந்துருவின் ஹோண்டா டியோ ஸ்கூட்டருக்கு ஆர்டிஓ அதிகாரிகள் வழங்கிய கேஏ 09 எச்ஜே 0597 என்ற பதிவெண்ணை, ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பயன்படுத்தி வலம் வருவது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்துரு இச்சம்பவம்குறித்து துணை ஆணையர் அலுவலகத்தில் (போக்குவரத்து) புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, நகரத்தின் அனைத்து காவல்நிலையங்களுக்கும் போலீ நம்பர் பொருந்திய வாகனம்குறித்த தகவல் பரிமாறப்பட்டது.
இந்த நிலையில், அறிவிப்பு வெளியிட்ட வெறும் இரண்டே மணி நேரங்களில் போலி பதிவெண்ணைப் பயன்படுத்தி பைக்கை இயக்கி வந்த அந்த மர்ம நபர் இர்வின் சாலையில் செய்யப்பட்ட வாகன தணிக்கையில் பிடிபட்டதாக தகவல் வெளிவந்தது.

அனைவரும் அதிர்ச்சியில் உரைய வைக்கின்ற வகையில் சம்பவத்தை நிகழ்த்திய அந்நபர் மைசூரில் உள்ள கே.ஜி. கொப்பல் பகுதியைச் சேர்ந்த ரவி என்று கூறப்படுகின்றது.
இவர், அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே மற்றொருவரின் வாகன பதிவெண்ணை தன்னுடைய பைக்கில் பயன்படுத்தியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

இதையடுத்து, ரவியை கைது செய்த போலீஸார், அவர் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், மேற்கட்ட விசாரணைக்காக அவரையும், அவரின் பைக்கையும் ஜெயலக்ஷ்மிபுரம் காவல்நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவரிடம் இதுபோன்ற வேறேனும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விதிமீறல் அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காக சொந்த வாகனத்தின் பதிவெண்ணிற்கு பதிலாக மற்றொருவரின் பதிவெண்ணைப் பயன்படுத்தியச் சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications