மலிவு விலையில் லெக்ட்ரோ இ-சைக்கிள் அறிமுகம்: முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம் தெரியுமா?
லெக்ட்ரோ நிறுவனம், இந்திய இளைஞர்களைக் கவர்கின்ற வகையில் புத்தம் புதிய இ-சைக்கிளை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

லெக்ட்ரோ நிறுவனம், டவுன் மாஸ்டர் என்னும் புதிய இ-சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ சைக்கிள்கள் நிறுவனத்தின் மற்றுமொரு பிராண்டாக லெக்ட்ரோ இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது. இது மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

இந்த பிராண்டின்கீழ் இஎச்எக்ஸ் 20 என்ற மாடலை ஹீரோ அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1.3 லட்சம் ஆகும். ஆரம்பநிலை ஸ்போர்ட்ஸ் ரக பைக்கின் விலையைக் கொண்டிருக்கும் இந்த சைக்கிளில், பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருப்பதன் காரணத்தினாலயே இத்தகைய அதிக விலை அதற்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் ரக இ-சைக்கிள் விரும்புகளை கவரும் வகையில், லெக்ட்ரோ நிறுவனம் மற்றுமொரு இ-சைக்கிளை தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அதற்கு இந்திய மதிப்பில் ரூ. 30,999 என்ற விலையை அது நிர்ணயித்துள்ளது.
இந்த இ-சைக்கிள் சுற்றுப்புறச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

லெக்ட்ரோ டவுன்மாஸ்டர் என்ற பெயரில் களமிறங்கியுள்ள இந்த புதிய இ-சைக்கிளை சாதாரண மின்சார பாயிண்டில் கூட வைத்துச் சார்ஜ் செய்து கொள்ள முடியும். அதற்கேற்ப வகையிலான சிறப்பம்சங்களை டவுன்மாஸ்டர் பெற்றிருக்கின்றது.
ஆகையால், லெக்ட்ரோ டவுன்மாஸ்டரை சார்ஜ் செய்ய தனிப்பட்ட சார்ஜிங் நிலையங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.

மேலும், இந்த இ-சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 3 மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது. அதேசமயம், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 30-ல் இருந்து 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இது நகரத்தின் உள்பகுதிக்குள்ளேயே சுற்றி வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இத்தகைய ரேஞ்சை லெக்ட்ரோ டவுன்மாஸ்டர் பெற்றிருக்கின்றது. மேலும், நகரப் பயன்பாட்டைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதன் காரணத்தினாலயே இந்த இ-சைக்கிலுக்கு டவுன்மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

டவுன்மாஸ்டர் இ-சைக்கிளில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்தவகையில், பயணத்தை சொகுசாக மாற்றும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்பு, நிரந்தர ஹெட்லைட், இரு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் மின்சார இணைப்பு எதுவும் வெளியில் தெரியாத வண்ணம் உட்கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பது என பல வசதிகள் அதில் செய்யப்பட்டுள்ளது.

இந்த இ-சைக்கிளின் அறிமுகம்குறித்து லெக்ட்ரோ இ-மொபிலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் ஆதித்யா முஞ்ஜல் கூறியதாவது, "இந்திய இளைஞர்கள் உடல் நலன் மற்றும் சுற்றுப்புறச்சூழலில் மிகுந்த அக்கறைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கேற்ப மாடலாக டவுன்மாஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, சுத்தமான போக்குவரத்து மற்றும் உடற்பயிற்சிக்கு உகந்ததாக அமையும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "லெக்ட்ரோ டவுன்மாஸ்டர், புதிய தயாரிப்புகள் மற்றும் பயணத்தில் புரட்சியையும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications