வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பீஜோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்... இந்தியாவிற்கு ஏமாற்றம் தானா?
இந்தியாவில் தயார் செய்யப்பட்ட பீஜோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் பீஜோ (Peugeot) நிறுவனத்தை கடந்த 2015-ம் ஆண்டு கையகப்படுத்தியது.
ஆகையால், இந்நிறுவனம் 2015ம் ஆண்டிற்கு பின்பிலிருந்து மஹிந்திரா நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகின்றது.

பீஜோ நிறுவனம், கடந்த சில வருடங்களாக விற்பனை விகிதத்தை இழந்து, மிகப் பெரியளவிலான நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றது. இது, மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்திய பின்னரும் நீடித்தது. ஆகையால், இதனை சீர் செய்யும் விதமாக, மிக துணிச்சலான முடிவை அந்நிறுவனம் எடுத்தது.

அதனடிப்படையில், பீஜோ மோட்டார்சைக்கிள்களை மீண்டும் மறு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் பெருவாரியான பணிகள் பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆகையால், அதன் ஸ்கூட்டர் பல புத்துயிர் பெற்றன.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் எம்டி பவன் கோயன்கா மணி கன்ட்ரோல் செய்தி தளத்திடம் கூறியதாவது, "பீஜோ மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவை மறு கட்டமைப்பிற்கு உள்ளாக்கப்பட்டன. இப்பணியில், மிகப் பெரிய டிசைனர்கள் பட்டாளமே கலந்துக் கொண்டது. இதற்காக, அந்நாட்டு மதிப்பில் 831,000 யூரோக்கள் செலவிடப்பட்டது. இம்முயற்சி, இனி வரும் காலங்களில் விற்பனை விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அதேசமயம், மஹிந்திரா நிறுவனம் பீஜோ நிறுவனத்தின் 51 சதவீத பங்கினை மட்டுமே வாங்கியுள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 216 கோடியை அது அளித்துள்ளது.
இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சரிவர விற்பனை வளர்ச்சியைப் பெறாத காரணத்தால், இதுவரை இந்திய மதிப்பில் ரூ. 1,765 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இருப்பினும், விட்டுக் கொடுக்காமல், இதன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில் மஹிந்திரா செயல்பட்டு வருகின்றது.

அந்தவகையில், பீஜோ இருசக்கர வாகனங்களை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் மஹிந்திரா தயாரித்து வருகின்றது. மேலும், இந்த ஆலையில் பீஜோ பிராண்டில் முதல் முறையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது தயாரித்துள்ளது.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட முதல் பேட்ச் பீஜோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைதான் மஹிந்திரா நிறுவனம், பிரான்ஸ் நாட்டிற்கு தற்போது ஏற்றுமதி செய்துள்ளது.

இது, அந்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெறும் அந்நிர்வாகம் எதிர்பார்க்கின்றது. மேலும், இந்நிறுவனத்தின் மீது நிலவி வரும் அளவுகடந்த நம்பிக்கையினால் ஆலோசனை செய்யாமலே, இந்திய மதிப்பில் ரூ. 100 கோடியை முதலீடு செய்திருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
பீஜோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு பெருமளவிலான எதிர்பார்ப்பு ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே நிலவுகின்றது.

இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 50 சிசி முதல் 400 சிசி வரையிலான திறன் கொண்டதாக இருக்கின்றது. இதில், மூன்று சக்கரங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றன.

பீஜோ இருசக்கர வாகனங்களை இந்தியாவில் களமிறக்கும் விதமாக, பல்வேறு மையங்களை அது நிறுவியது. ஆனால், அவை தற்போது செயல்பாட்டில் இல்லை. ஆகையால், இதன் இருசக்கர வாகனங்கள் அறிமுகமாவதில் மேலும் கால தாமதம் நீடிக்கலாம் என கூறப்படுகின்றது.

அதேசமயம், இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சாலைகளில் சோதனையோட்டம் செய்வதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகியது. ஆகையால், இவை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தற்போது, நாட்டின் மிகப்பெரிய தேர்வில் ஒன்றாக மின்சார வாகனங்கள் மாறி வருகின்றன. இதனைப் பூர்த்தி செய்யும் விதமாக, பல நிறுவனங்கள் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கி வருகின்றது. இதனடிப்படையில், பீஜோ நிறுவனமும் அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








