பீஜோ ஸ்கூட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தும் மஹிந்திரா!
பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ நிறுவனம் வாகன உற்பத்தியில் ஐரோப்பாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதன் இருசக்கர வாகனப் பிரிவான பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனம் 2015ம் ஆண்டு கையகப்படுத்தியது.

இந்த நிலையில், பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான முறையான ஒப்பந்த நடைமுறைகள் விரைவில் படிப்படியாக முடிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

பீஜோ நிறுவனத்தின் கிஸ்பீ 50 சிசி ஸ்கூட்டர், மெட்ரோபொலிஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், பீஜோ இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனையை உயர்த்துவதற்காக பல புதிய மாடல்களை களமிறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் செய்யும் முதலீடு காரணமாக, வரும் 2021ம் ஆண்டுக்குள் பீஜோ நிறுவனம் 7 புதிய இருசக்கர வாகன மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் விற்பனையும், வர்த்தக வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தினாலும் கூட, பீஜோ குழுமத்தின் டிசைன் வல்லுனர்கள் தொடர்ந்து பீஜோ இருசக்கர வாகன நிறுவனத்தின் புதிய மாடல்களை உருவாக்கும் பணிகளிலும், டிசைன் பணிகளியும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எவ்வளவு தொகை கொடுத்து பீஜோ இருசக்கர வாகனப் பிரிவு வாங்கப்படுகிறது என்பது குறித்து மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த புதிய முதலீடு மூலமாக தொழில்நுட்பம், டிசைன் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் வல்லமையை பெறும் வாய்ப்பு மஹிந்திராவுக்கு கிடைத்துள்ளது.

அத்துடன், பல புதிய நாடுகளில் இருசக்கர வாகன விற்பனை வர்த்தகத்தை கையில் எடுப்பதற்கான வாய்ப்பையும் மஹிந்திராவுக்கு கிடைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து பல புதிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








