நடிகை அசின் கணவர் தொடங்கும் புதிய பிஸ்னஸ் இதுதான்... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...
பிரபல நடிகை அசினின் கணவர் புதிய பிஸ்னஸ் ஒன்றை தொடங்கவுள்ளார். அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி திரைப்படங்களிலும் அசின் நடித்தார். அசினுக்கு போட்டியாக இருந்த த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு இன்றும் மார்க்கெட் உள்ளது. அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

ஆனால் அசின் கடந்த 2016ம் ஆண்டே திருமணம் செய்து கொண்டார். அத்துடன் படங்களில் நடிப்பதற்கும் முழுக்கு போட்டு விட்டார். தொழில் அதிபர் ராகுல் சர்மாவைதான் அசின் திருமணம் செய்துள்ளார். இவர் இந்தியாவின் பிரபல செல்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸின் 5 நிறுவனர்களில் ஒருவர். விவோ, ஓப்போ, ஷியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால், மைக்ரோமேக்ஸ் வியாபாரம் 'டல்' அடிக்கிறது.

இந்த சூழலில் தற்போது புதிய பிஸ்னஸ் ஒன்றில் குதிக்க ராகுல் சர்மா முடிவு செய்துள்ளார். இந்தியாவில் தற்போது வளர்ச்சியடைந்து வரும் எலெக்ட்ரிக் வாகன பிஸ்னஸ்தான் அது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியமும் கொடுக்கிறது.

இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் 10,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஃபேம் இந்தியா என்பது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஒரு திட்டமாகும். இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசால் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான் இது.

எனவே வருங்காலங்களில் இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நன்றாக புரிந்து கொண்டு அழகாக காய் நகர்த்தி வருகிறார் ராகுல் சர்மா. இது ஒன்றும் தற்போது உடனடியாக தொடங்கப்பட்ட திட்டமல்ல. எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் கால் பதிப்பதற்கான பணிகளை ராகுல் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வருகிறார்.

தொழில் அதிபர் ராகுல் சர்மாவின் நிறுவனம் வெகு விரைவில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதான் அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இருக்கும். இதில், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா தளத்திற்கு ராகுல் சர்மா அளித்த பேட்டியில், ''எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் சாதிப்பதற்கான எனது ஹோம் ஒர்க்கை முடித்து விட்டேன். இந்த மோட்டார் சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதுடன், இதனை இயக்குவதற்காக ஆகும் செலவும் குறைவுதான். இதன்மூலம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு பலன் கிடைக்கும்'' என்றார்.

ஆனால் தனது நிறுவன தயாரிப்பின் பெயர் என்ன? என்ற தகவலை ராகுல் சர்மா வெளியிடவில்லை. அத்துடன் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற தகவல்களையும் ராகுல் சர்மா கூறவில்லை. எனினும் வரும் ஜூன் மாத இறுதியில் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லிதான் இதன் முதல் மார்க்கெட்டாக இருக்கும்.

டெல்லிக்கு அப்பாலான விற்பனையும் வெகு விரைவில் தொடங்கப்பட்டு விடும். வழக்கமான அவுட்லெட்கள் மட்டுமல்லாது ஆன்லைன் மூலமாகவும் இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தொடர்பாக மேலும் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஹரியானா மாநிலம் மனேசரில் அமைக்கப்பட்டுள்ள 1 லட்சம் சதுர அடி பரப்பளவிலான தொழிற்சாலையில் இந்த மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக 45 பேர் கொண்ட குழுவை ராகுல் சர்மா நியமனம் செய்திருப்பதாகவும் தெரிகிறது.

பேட்டரி செல்ஸ் மற்றும் டூவீலர் மோட்டார் ஆகியவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அனேகமாக அது சீனாவாக இருக்கலாம். ஆனால் எலெக்ட்ரிக் வாகன கண்ட்ரோல் யூனிட் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படும். நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி நிறுவனங்களின் கடுமையான போட்டியை சமாளித்துதான் மைக்ரோமேக்ஸ் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதே பாணியை எலெக்ட்ரிக் வாகன தொழிலிலும் ராகுல் சர்மா கடைபிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








