சூப்பர்... பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னவென்று தெரியுமா?
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு சமீபத்தில் அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஓர் உதாரணம். இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. எனவே அபராத தொகைகளை செலுத்த பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதுதவிர வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க காவல் துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் காலபுராகியில் (Kalaburagi), 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' திட்டத்தை அமலுக்கு கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர். குல்பர்கா நகரம்தான் (Gulbarga) காலபுராகி எனவும் அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே செப்டம்பர் 29ம் தேதிக்கு பிறகு நீங்கள் குல்பர்காவில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால், எதற்கும் உங்கள் டூவீலரை தள்ளி கொண்டு போக தயாராக இருங்கள். குல்பர்கா போலீஸ் கமிஷனர் நாகராஜ்தான் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை அவர் கடந்த சனிக்கிழமையன்று சந்தித்தார்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என பங்க் உரிமையாளர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற திட்டத்தை போலீசார் முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் நாளாக நாளாக இந்த திட்டத்தை மறந்து விடுகின்றனர். ஆனால் குல்பர்கா போலீசார் இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதில் மிகவும் உறுதியாக உள்ளனர். ஏனெனில் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்.

இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பே ஹெல்மெட்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் அதனை கடைபிடிப்பதில்லை.


Click it and Unblock the Notifications








