ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ செல்லலாம்... விரைவில் ஒகினவா பைக்... சிறப்பு தகவல்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஒகினவா நிறுவனம், மின்சார பைக்குகளையும் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வரும் ஒகினவா நிறுவனம், விரைவில் அதன் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக் ரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி 400 மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த தகவலை மணி கன்ட்ரோல் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

ரிவோல்ட் நிறுவனம், அதன் முதல் மாடல் பைக்கை இந்தியாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்குகள் தற்போது இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றது. இன்னும் தமிழகத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. தமிழகம் மட்டுமல்ல இன்னும் பல மாநிலங்களின் நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்குள்ளாக, தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒகினவா நிறுவனம், ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில், புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த மின்சார பைக் ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது மிகச் சிறந்த ரேஞ்சாகும். இந்த வசதியுடைய ஒகினவா எலெக்ட்ரிக் பைக், நடப்பாண்டிற்கு பின்னரே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒகினவா நிறுவனம், 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது. கடந்த நிதியாண்டில் மட்டும் 45 ஆயிரம் யூனிட்டுகளுக்கும் அதிகமான மின்சார ஸ்கூட்டர்களை அது விற்பனைச் செய்தது.

இந்த நிறுவனம், ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கினாலும், ஜப்பானைச் சேர்ந்த ஓர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனம் ஒகினவா ஸ்கூட்டர்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றது.
இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையிலான யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.

இதையடுத்தே புதிய எலெக்ட்ரிக் பைக்கையும் அந்நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஒகினவா எலெக்ட்ரிக் பைக் மிக மலிவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், அதனை அந்நிறுவனம் உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்க இருக்கின்றது.

ஆகையால், மத்திய அரசின் மானிய திட்டத்தின்கீழ் அந்த பைக் சற்று குறைவான விலையில் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே, ஒகினவாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மத்திய அரசின் மானியத்திட்டத்தின்கீழ் ரூ. 7,500 முதல் ரூ. 22 ஆயிரம் வரை சலுகைப் பெற்று வருகின்றது. ஆகையால், இதேபோன்ற சலுகை ஒகினவாவின் புதிய பைக்கிற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்த எலெக்ட்ரிக் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே விற்பனைக்கு வரும் என அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜிதேந்தர் ஷர்மா அண்மையில் தெரிவித்திருந்தார்.
விலை சற்று குறைவாக இருந்தாலும், தொழில்நுட்ப வசதிகளில் குறைச்சலின்றி விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. அந்தவகையில், லித்தியம் அயன் பேட்டரி மற்றும் பிஎல்டிசி மோட்டாரை அது பெறவிருக்கின்றது.

அத்துடன், ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இடம் பெறவுள்ளது. மேலும், எல்இடி ஹெட்லேம்ப், ட்வின் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








