இந்தியாவில் ராயல் என்பீல்டு சகாப்தம் முடிவடைகிறது? ஜாவா வெளியிட்ட இந்த தகவலால் கடும் அதிர்ச்சி...
இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தற்போது ஜாவா வெளியிட்டுள்ள ஒரு தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக இருந்து வரும் ஒரே தலைப்பு ஜாவா மட்டுமே. ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

கடந்த 1970, 80 கால கட்டங்களில் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் பின்னாளில் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இருந்தபோதும் வாடிக்கையாளர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில், ஜாவா பைக்குகள் தற்போது இந்தியாவில் ரீ-லான்ச் செய்யப்பட்டுள்ளன.

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் சரிவடைய தொடங்கியுள்ளது. கடுமையான போட்டியை வழங்க கூடிய நிறுவனங்கள் எதுவும் இல்லாததால், இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு மட்டும் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்து கொண்டிருந்தது.

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக, ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பின் ராயல் என்பீல்டு நிறுவனம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஜாவா அறிமுகத்திற்கு பிந்தைய, கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 4 மாதங்களிலும் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஜாவாதான் இதற்கு முக்கியமான காரணம்.

ஜாவா அல்லது ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 என்ற பெயர்களில் 2 பைக்குகள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், ஜாவா கிளாசிக் ரூ.1.64 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும், ஜாவா 42 ரூ.1.55 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும் லான்ச் செய்யப்பட்டன.

ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களிலும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் 2 பைக்குகளின் விலையும் தலா 9 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது.

ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வெர்ஷன் ஜாவா கிளாசிக் பைக்கின் விலை ரூ.1.73 லட்சமாகவும், ஜாவா 42 பைக்கின் விலை ரூ.1.64 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு மார்ச் மாதம் முதல் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி பணிகள் தொடங்கப்படுகின்றன.

ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களை தேர்ந்து எடுத்த வாடிக்கையாளர்களுக்கு, வரும் ஜூன் முதல் பைக்குகள் டெலிவரி செய்யப்படும். ஆம், இன்னும் ஜாவா டெலிவரியே தொடங்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே ராயல் என்பீல்டு கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக்குகளிலும், 293 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது.

இந்த இன்ஜின் விரைவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அத்துடன் புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும் சமயங்களில் எல்லாம், இதனை அப்கிரேட் செய்து கொள்ளவும் முடியும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு ஜாவா பைக் பெராக். இதில், பொருத்தப்பட்டுள்ள 334 சிசி, லிக்யூட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.89 லட்சம். 2019ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஜாவா பெராக் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜாவா கிளாசிக், ஜாவா 42 ஆகிய 2 மாடல்களுக்கும் கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக பெராக் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனவே நடப்பாண்டின் இறுதியில்தான் ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில், தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அங்கு ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை விற்று தீர்ந்து விட்டன. எனவே கேரளாவில் தற்போதைக்கு புக்கிங்குகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக கேரளா திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்துதான் அதிக எண்ணிக்கையிலான புக்கிங் குவிந்து வருகிறது.

23 முதல் 29 வரையிலான வயதுடையவர்கள்தான் ஜாவா பைக்குகளை அதிகம் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஜாவா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் அனைத்தும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க கூடும்.

ஜாவா அளிக்கும் கடும் போட்டியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தற்போது உள்ள வாடிக்கையாளர்களையும் தக்க வைத்து கொள்ள முடியாமல், இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை ராயல் என்பீல்டு உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது.

ஜாவாவை போல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ஜாவா ஷோரூம்கள் பக்கம் திரும்புவார்களா? அல்லது ராயல் என்பீல்டு ரசிகர்களாகவே தொடர்வார்களா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications








