பிஎஸ்-6 எஞ்சினுடன் வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்
பிஎஸ்-6 எஞ்சினுடன் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம் இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா பிராண்டில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், அதற்கு தக்கவாறு பிஎஸ்-6 எஞ்சினுடன் தனது புதிய ஸ்கூட்டர் மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஏப்ரிலியா நிறுவனத்தின் எஸ்ஆர் வரிசையில் எஸ்ஆர்125, எஸ்ஆர்125 ஸ்டார்ம், எஸ்ஆர் 150, எஸ்ஆர் 150 கார்பன் மற்றும் எஸ்ஆர் 150 ரேஸ் ஆகிய ஸ்கூட்டர்கள் பிஎஸ்-6 தர எஞ்சினுடன் வந்துள்ளன. மேலும், ஏப்ரிலியா எஸ்ஆர் வரிசையில் புதிய 160 சிசி எஞ்சின் மாடலும் வந்துள்ளது.

இந்த மாடலில் இருக்கும் 160 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. மேலும், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான முதல் 160 சிசி எஞ்சின் மாடல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெஸ்பா நிறுவனத்தின் எஸ்எக்ஸ்எல் மற்றும் விஎக்ஸ்எல் பெயர்களில் விற்பனை செய்யப்படும் 125 சிசி மற்றும் 150 சிசி எஞ்சின்களும் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் பிஎஸ்-6 தரத்திற்காக கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களில் இந்த புதிய பிஎஸ்-6 மாடல்கள் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. பிஎஸ்-6 மாடல்களின் விலை ரூ.10,000 வரை கூடுதலாகும் வாய்ப்புள்ளது.

ஏப்ரிலியா எஸ்ஆர் மாடல்கள் ரூ.65,000 முதல் ரூ.79,000 வரையிலான விலையிலும், வெஸ்பா மாடல்கள் ரூ.73,000 முதல் ரூ.1.01 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள அனைத்து வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஷோரூம்களில் புதிய பிஎஸ்-6 எஞ்சின் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து பியாஜியோ இந்தியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டியாகோ கிராஃபி கூறுகையில்,"பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாகவே வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாசு உமிழ்வை குறைப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணையாக எங்களது நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்கூட்டர்களில் மாசு உமிழ்வை வெகுவாக குறைத்திருக்கிறோம். எதிர்காலத்திற்கு ஏற்ற புதுமையான, சிறந்த போக்குவரத்து முறையை கொண்டு வருவதை உணர்ந்து செயலாற்றி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஹோண்டா, ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை தொடர்ந்து பியாஜியோ குழுமம் தனது கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா பிராண்டுகளின் ஸ்கூட்டர்களை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தியுள்ளது. பிற நிறுவனங்களும் மிக விரைவில் பிஎஸ்-6 மாடல்களை வரிசைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








