ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பல்சர் 150 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு என தெரியுமா?
ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பல்சர் 150 நியான் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்சர் 150 நியான் ஏபிஎஸ் (Pulsar 150 Neon ABS) மோட்டார்சைக்கிளை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரும் விலை 67,386 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இல்லாத மாடலுடன் ஒப்பிடுகையில், இதன் விலை 1,940 ரூபாய் அதிகம் ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பஜாஜ் நிறுவனம் தனது பெரும்பாலான மாடல்களை ஏபிஎஸ் வசதியுடன் அப்டேட் செய்து விட்டது. இதன் ஒரு பகுதியாகதான் பல்சர் 150 நியான் ஏபிஎஸ் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை அறிமுகம் செய்திருப்பதை தவிர பல்சர் 150 நியான் மோட்டார்சைக்கிள் மாடலில் பஜாஜ் நிறுவனம் வேறு எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை. அத்துடன் கூடுதல் வசதிகள் எதையும் சேர்க்கவில்லை. பல்சர் 150 நியான் மோட்டார்சைக்கிள் மாடலில், நியான் ரெட், நியான் சில்வர் மற்றும் நியான் யெல்லோ என மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களை பஜாஜ் நிறுவனம் வழங்குகிறது.

பல்சர் 150 நியான் பைக்கில், அதே 149 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 15 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 12 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 112 கிலோ மீட்டர்கள்.

பல்சர் 150 நியான் மோட்டார்சைக்கிளில், 15 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்படுகிறது. இதன் ரிசர்வ் கெபாசிட்டி 3.2 லிட்டர்கள். பல்சர் 150 நியான் மோட்டார்சைக்கிள் மாடல் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என அராய் சான்று வழங்கியுள்ளது. 150 சிசி பைக்குகளை பொறுத்தவரை இதனை அட்டகாசமான மைலேஜ் என்றே சொல்லலாம்.

இதன் முன் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 130 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. முன்னதாக 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்றே அமலுக்கு வந்து விட்டது.

அதே சமயம் 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காகவே ஏபிஎஸ், சிபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








