நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் தொடரும் சேவை... அதிர்ச்சி தகவல்...!
அண்மையில் வெளியாக நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் பைக் டாக்ஸி சேவை இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களின் சாலைகளை ஆளும் வாகனங்களாக, கால் டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் இருக்கின்றன. இவை, வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பிக்-அப் செய்து, அவர்கள் விரும்பிய இடத்தில் டிராப் செய்கின்றன.
மேலும், இந்த சேவையானது, ஆன்லைன் அல்லது மொபைல் போன் ஆப்பினைச் சார்ந்து இயங்குகின்றது.

முன்னதாக இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், தற்போது பைக்குகளும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இவை, கார்கள் செல்ல முடியாத குறுகலான பாதைகளில்கூட செல்வதால், பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதேசமயம், கார்களின் வாடகையைக் காட்டிலும், குறைவான கட்டணத்தை பெறுவதாலும், இந்த சேவை பலர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், மூன்று கிலோ மீட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கார் மற்றும் ஆட்டோவைக் காட்டிலும் மிக மலிவான கட்டணமாகும்.

மேலும், பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்துவதன்மூலம், நகர்புற சாலைகளில் பயணிப்பது மிக எளிதாக இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துடன், கார்களில் செல்லும் நேரத்தைக் காட்டிலும் மிக விரைவாக சென்றடைந்துவிடுவதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், இந்த பைக் டாக்ஸிகள் பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாகவே, கடந்த வியாழக்கிழமை ( ஜூலை 18) சென்னை உயர்நீதிமன்றம், பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆகையால், சென்னையில் பைக் டாக்ஸி சேவையை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதிலும், முக்கியமாக தெலங்கானா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தை நீதிபதி ஜெயசந்திரன் கடுமையாக சாடியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், திங்கள் கிழமையான நேற்று வரையிலும், ரேபிடோ நிறுவனத்தின் பைக் டாக்ஸிகள், உத்தரவை மீறி இயக்கியதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இணை இயக்குனர் அரவிந்த் சங்கா-விடம் கேட்கையில், அவர் மௌனமாக வெளியேறியதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை ஆட்டோ எகனாமிக்டைம்ஸ் ஆங்கில செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக, இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டாக்ஸியாக பயன்படுத்துவது குற்றமாக கருதப்படுகின்றது.

எந்தவொரு வாகனத்தையும் பொதுசேவையில் இயக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட உரிமத்தை அது பெற்றிருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது. அதன்படி, பொதுசேவையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

அதேபோன்று, பொது பயன்பாட்டு வாகனம் என்பதால், தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகளை அது கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆனால், இதில் எந்தவொரு விதிமுறையையும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பைக் டாக்ஸிகள் கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதன்காரணமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 175 பைக்குகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில், 96 பைக்குகள் சென்னையைச் சேர்ந்தவையாகும்.
மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பைக் டாக்ஸியின் உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போன்று அல்லாமல், இருசக்கர வாகனங்களை பெர்மிட் செய்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவில்லை. மிக தெளிவாக கூறவேண்டுமானால், தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட வர்த்தக வாகனமாக பதிவு செய்ய முடியாது. ஏனென்றால், இதற்கான சட்டம் இன்றளவும் தமிழக போக்குவரத்துத்துறையில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

ஆகையால், தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை தனியார் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக டாக்ஸி சேவையில் அவற்றை பயன்படுத்த முடியாது.

பைக்-டாக்ஸிகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் செய்தால் மட்டுமே பைக் டாக்ஸிகள் ஒரு யதார்த்தமாக முடியும். இதற்கான கூறுகளை மத்திய தற்போது மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆகையால், இன்னும் நான்கு மாதங்களில் பைக் டாக்ஸிக்கான சட்டபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








