டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா!
எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா முதலீடு செய்ய இருக்கிறார்.

புனே நகரை சேர்ந்த டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு டார்க் டி6எக்ஸ் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், வர்த்தகத்தை முன்னெடுக்கும் விதத்தில், போதிய நிதி ஆதாரத்தை டார்க் மோட்டார்ஸ் திரட்டி வருகிறது. ஓலா டாக்சி நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் உள்ளிட்டோர் ஏற்கனவே டார்க் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வாகனப் பிரியருமான ரத்தன் டாடா தற்போது டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரத்தன் டாடா கூறுகையில்," கடந்த சில ஆண்டுகளில், மின்சார வாகனத் துறையில் அபரிமிதமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய தேர்வு செய்துள்ளோம். இந்த துறையில் உத்வேகத்துடன் முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு இத்திய தொழில் அதிபர்களும் முன்வர வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைமை செயல் அதிகாரியுமான கபில் ஷெல்கே கூறுகையில்," உலகின் மிக பிரபலமான தொழில்துறை தலைவர்களில் ஒருவரான ரத்தன் டாடா எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரத்தன் டாடாவின் சார்பில் அதிகாரிகள் குழு எங்களது ஆலையில் ஆய்வு செய்ததுடன், எங்களது எலெக்ட்ரிக் பைக்கையும் ஓட்டி பார்த்தனர். அதன் பின்னரே, இந்த முடிவை ரத்தன் டாடா எடுத்துள்ளார். எங்கள் மீது நீண்ட கால நம்பிக்கை வைத்து முதலீடு செய்வது எங்களுக்கு பெருமை அளிக்கிறது,"என்று கூறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. ரூ.1.25 லட்சம் என்று விலையும் அறிவிக்கப்பட்டதுடன், 1,000 முன்பதிவுகளும் பெறப்பட்டன. முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் என்ற பெருமையுடன் டார்க்இந்த பைக் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் பேச்சுமூச்சை இல்லை. டார்க் நிறுவனத்திற்கு முன்னதாகவே ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் வந்துவிட்டது.

ஆனால், டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக் தொடர்ந்து சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து வருகிறது டார்க் மோட்டார்ஸ். இந்த பைக்கில் 6kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும் என்று டார்க் நிறுவனம் தெரிவித்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பைக் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








