புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ் பைக்குகளை கிளாசிக் மாடலாக மாற்றும் டீலர்கள்... எதற்காக தெரியுமா?
புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ் பைக்குகளை, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்வாய்ந்த மாடலாக உள்ள கிளாசிக்காக அந்நிறுவனத்தின் டீலர்கள் உருமாற்றம் செய்து வருகின்றனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையும் நடப்பு 2019ம் ஆண்டு துவங்கிய முதல் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றது.
இதன் பின்விளைவாக, கடந்த காலங்களில் சந்தித்த விற்பனை விகிதத்தை வாகன உற்பத்தி நிறுவனங்களால் பெற முடியவில்லை.

இதன்காரணமாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களும், டீலர் ஷோரூம்களும் சில அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், ஆட்குறைப்பு, உற்பத்தி குறைப்பு, பணி நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை அவை கையாண்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய விற்பனைச் சரிவை ஈடுகட்ட, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் டீலர்கள் முற்றிலும் வித்தியாசமான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.
அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிரையல்ஸ் 350 மற்றும் டிரையல்ஸ் 500 ஆகிய புல்லட் ஸ்டைலிலான பைக்குகளை கிளாசிக் ரக பைக்குகளாக மாற்றி வருகின்றனர். இதனை, குறிப்பிட்ட சில டீலர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

இதில், டிரையல்ஸ் 350 பைக்கிற்கு ரூ. 1.62 லட்சம் என்ற விலையும், டிரையல்ஸ் 500 மாடலுக்கு ரூ. 2.07 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
இந்த புல்லட் டிரையல்ஸ் பைக்கில் கிளாசிக் மாடலில் உள்ள அதே திறனிலான எஞ்ஜின்கள்தான் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், டிரையல்ஸ் 350 பைக்கில் 346 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 20 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

அதேபோன்று, டிரையல்ஸ் 500 மாடலில் 499சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 27.5 எச்பி பவரையும், 41.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு பைக்குகளிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஒரே மாதிரியான எஞ்ஜினைப் பெற்றிருப்பதால், புல்லட் டிரையல்ஸ் பைக்கை கிளாசிக் மாடலாக மாற்றுவது டீலர்களுக்கு மிகவும் சுலபமானதாக இருக்கின்றது. ஆகையால், இதன் இருக்கை மற்றும் சைலென்சர் போன்ற சில பாகங்களை மட்டும் கிளாசிக் மாடலில் இருந்து பெற்று பொருத்தியுள்ளனர்.

புதிய டிரையல்ஸ் மாடல் பைக்குகள் ஆஃப்ரோடு பயணத்தைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது, வாடிக்கையான புல்லட்டைக் காட்டிலும் வித்தியாசமாக காணப்படும் வகையில், குறுகலான ஃபெண்டர் மற்றும் உயரமான ஹேண்டில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், ப்யூவல் டேங்க் போன்ற சில பாகங்கள் மட்டும் ஸ்டாண்டர்டு புல்லட்டில் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.

மேலும், தனித்துவமான லுக்கைப் பெற வேண்டும் என்பதற்காக புல்லட் டிரையல்ஸ் பைக்குகளுக்கு மிகவும் பிரத்யேகமான வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சேஸிஸ், பக்கவாட்டு ஸ்டாண்டு, ஃபெண்டர் ஹோல்டர் உள்ளிட்டவற்றிற்கு செந்தூரம் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, பல்வேறு சிறப்புகளுடன் அறிமுகமான இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த பைக் அறிமுகமான சூழல் மிக மோசமானாதாக இருக்கின்றது. மேலும், இதன் கடந்த கால விற்பனை மிக மோசமான நிலையைக் குறிக்கும் வகையில் உள்ளது. இதன்காரணமாக, இந்த பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, கிளாசிக் பைக்கின் பாகங்கள், டிரையல்ஸுக்கு பொருத்தப்பட்டு வருகின்றது.

இந்த முயற்சியானது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கின்றது. இது, டீலர்களுக்கு கை கொடுக்குமா என்பதைப் பொருத்திருந்துதான பார்க்க வேண்டும். அதேசமயம், தற்போது நிலவி வரும் மந்த நிலையை ராயல் என்பீல்டு நிறுவனம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வாகனத்தையுமேச் சந்தித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








