ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...
விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய திட்டம் ஒன்றினை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பாரம்பரியம் மிக்க ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்டோமொபைல் துறை பல்வேறு காரணங்களால் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கார், டூவீலர் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் விற்பனையிலும் மந்த நிலை நிலவுகிறது.

இதனால் விற்பனையாகாமல் தேக்கமடையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு முன்னணி நிறுவனங்களும் வாகன உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் ஒரு சில நாட்கள் உற்பத்தியை நிறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன.

இதில், முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டும் தப்பவில்லை. கடந்த சில மாதங்களாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஒட்டுமொத்த விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. ஜாவாவின் வருகை, மார்க்கெட் மந்த நிலை என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஆனால் விற்பனை சரிவு என்ற நிலையில் இருந்து ராயல் என்பீல்டு நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான புதிய வழிகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மினி டீலர்ஷிப்களை அமைப்பது குறித்து ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளை குறி வைத்து இந்த மினி டீலர்ஷிப்கள் அமைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த மினி டீலர்ஷிப்கள் ராயல் என்பீல்டு பிராண்டை இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையை அதிகரிக்க உதவுவதுடன், ராயல் என்பீல்டு நிறுவனத்தை எதிர்காலத்தில் இன்னும் வலுவானதாக மாற்றவும் இந்த மினி டீலர்ஷிப்கள் உதவி செய்யும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈச்சர் மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரி லலித் மாலிக் LiveMint தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மெட்ரோ நகரங்களில் உள்ள வழக்கமான ராயல் என்பீல்டு ஷோரூம்களின் அளவில் 6ல் 1 பங்கு என்ற அளவிற்கு இவை இருக்கும். ஆனால் இந்த சிறிய ஸ்டோர்களில் ஒரு மாதத்திற்கு 12-20 பைக்குகளுக்கு மேல் விற்பனையாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் இயங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையே சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 மாடல்கள்தான் 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட இந்தியாவின் பீரிமியம் செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக அவை உருவெடுத்துள்ளன.

ராயல் என்பீல்டு 350 சிசி மற்றும் 500 சிசி ரைடர்கள் ஏராளமானோர் 650 ட்வின்ஸ் மாடல்களுக்கு மாறி வருகின்றனர். ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்களின் வெற்றிக்கு சவாலான விலை நிர்ணயமும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








