ஹீரோ, ஹோண்டா நிறுவனங்கள் ஆச்சரியம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் சுஸுகி... சோதனையிலும் ஓர் சாதனை!
நாட்டின் ஜாம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களுக்கு எட்டாத கனி ஒன்று சுஸுகி மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நடப்பாண்டின் ஜனவரி மாதம் துவங்கியது முதல் இந்திய வாகனத்துறை மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இந்த வீழ்ச்சியானது, 2018ம் ஆண்டின் மத்தியிலேயே தொடங்கியிருந்தாலும், அதன் வீரியம் ஜனவரி மாதத்தில் இருந்தே வெளியே தெரியவந்தது.
இந்திய வாகனத்துறையின் இத்தகைய மோசமான நிலைக்கு, அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடக்கைகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் பெருநகரங்கள் சுற்றுப்புற சீர்கேட்டை அடைந்து வருகின்றன. அதற்கு மிகப்பெரிய உதாரணமாக புது டெல்லி இருக்கின்றது. இங்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுற்ற புகை, பனி படலத்தைப்போன்று காட்சியளிக்கும்.
இந்த புகை காற்றை மாசடையச் செய்வதுடன் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமைகின்றது. ஆகையால், இத்தகைய சூழலை கணிசமாக குறைக்கும் விதமாக எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் எதிரொலியாக இந்தியாவில் வாகன விற்பனை மிக மோசமான மந்த நிலையைச் சந்தித்து வருகின்றது. இந்த மந்த நிலையில், வாகன உற்பத்தியில் ஜாம்பவான்களாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹீரோ மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையான மந்த நிலையில் சிக்கி தத்தளித்து வருகின்றன.

இந்நிலையில், ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் மட்டும் கடந்த காலங்களில் நல்ல விற்பனை விகித்ததைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு, அது அண்மையில் அறிமுகம் செய்த ஜிக்ஸெர் பேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் கணிசமான விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.
அண்மைக் காலங்களாக தீவிரமடைந்து வரும் விற்பனை வீழ்ச்சியை சமாளிக்கும் விதமாக, அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றன. இருப்பினும் அதில் போதிய பலன் கிடைக்கவில்லை.

ஆனால், சுஸுகி நிறுவனத்தின் சில முயற்சிகளுக்கு மட்டும் நல்ல பலன் கிடைத்துள்ளது. அதனால்தான் தற்போது, இந்திய வாகன உலகில் ஜம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹீரோ மற்றும் ஹோண்ட ஆகிய இரு நிறுவனங்களுக்கும் எட்டா கனியாக மாறியுள்ள விற்பனை வளர்ச்சி சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

தற்போது சுஸுகி பெற்றிருக்கும் இந்த வளர்ச்சியை மிகப்பெரிய வளர்ச்சி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், சமீபகாலமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்து வரும் கடுமையான மந்தநிலையில், தற்போது சுஸுகி பெற்றிருக்கும் இந்த வளர்ச்சி, ஆச்சரியமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டின் செப்டம்பர் மாதத்தில் 2.11 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 72,134 யூனிட் இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. ஆனால், 2019ம் ஆண்டில் 73,658 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது. இது உள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட விற்பனையாகும்.

இதில், உள்நாட்டு சந்தைக்காக மட்டும் 63,382 யூனிட் இருசக்கர வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 63,140 யூனிட்டுகளாக உள்ளன. ஆகையால், சுஸுகி மோட்டார்சைக்கிள்களுக்கான உள்நாட்டு சந்தை எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது சோதனை காலத்தில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








