ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டியவர்களுக்கு ஆப்பு வைத்த போலீசார்... எதற்காக தெரியுமா?
ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டியவர்களுக்கு போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை மாடிபிகேஷன் செய்யும் கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள்தான், ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள் மூலம் அதிகமாக மாடிபிகேஷன் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ஏராளமான ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள் கிடைப்பதே இதற்கு காரணம். ஆனால் அவற்றில் பெரும்பாலான சைலென்சர்கள், அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் அதிக ஒலியை உமிழ்கின்றன.

இந்தியாவில் சட்டப்படி பார்த்தால் ஒரு இரு சக்கர வாகனத்தின் சைலென்சர் அதிகபட்சமாக 80 டெசிபல் அளவிற்கான ஒலியை மட்டுமே உமிழ வேண்டும். ஆனால் சில ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் 140 டெசிபல் வரையிலான சப்தத்தை உருவாக்குகின்றன.

140 டெசிபல்கள் என்பது மிகவும் அதிக சப்தம் ஆகும். இது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. எனவேதான் இரு சக்கர வாகனங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இளைஞர்கள் பலர் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மூலம் டூவீலர்களை மாடிபிகேஷன் செய்து கொண்டேதான் உள்ளனர். அத்தகைய நபர்கள் மீது இந்தியாவின் பல்வேறு மாநில போலீசார் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர்.

ஒரு சில நகரங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நகரங்களில் போலீசாரால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அழிக்கப்படுகின்றன.

இதற்கு ஜேசிபி கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அவை மீண்டும் சாலைக்கு வராமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு அருகே உள்ள தாவணகரே போலீசாரும் அத்தகைய அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் அழித்துள்ளனர். இதற்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஒட்டுமொத்தமாக எவ்வளவு சைலென்சர்கள் அழிக்கப்பட்டன என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் வீடியோவை வைத்து பார்க்கையில், சுமார் 50 சைலென்சர்கள் இருக்கலாம். அதேபோல் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இது தொடர்பான செய்தியை சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த கூடாது என்ற விழிப்புணர்வு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்படும்.

இத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் எப்படி கிடைக்கிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்தியாவில் இத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை விற்பனை செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் பொது சாலைகளில் அவற்றை பயன்படுத்துவது என்பது சட்ட விரோதமானது.

அப்படியானால் அவற்றை நாம் பயன்படுத்தலாமா? என்றால், நிச்சயமாக பயன்படுத்தலாம். ஆனால் ரேஸிங் டிராக்குகள் மற்றும் தனியார் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். பொது சாலைகளில் பயன்படுத்த முடியாது. மீறினால் நடவடிக்கை பாயும்.


Click it and Unblock the Notifications








