கார், இருசக்கர வாகன விற்பனையில் தொடர் சரிவு... காரணம் இதுதான்!
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் ஏற்பட்ட வேலை இழப்பு பிரச்னை பயணிகள் வாகன விற்பனையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்கூட்டர் விற்பனை குறைந்துள்ளது. கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் 67.2 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் 67 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது 0.27 சதவீதம் குறைவு.

மேலும், உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 17.31 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து பைக்குகள் விற்பனையும் மந்தமான நிலையே காணப்படுகிறது. இதனால், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.

எனவே, வரும் மாதங்களிலும் விற்பனை உடனடியாக எழுச்சி பெறுவதில் சந்தேகம் நிலவுகிறது. இதேபோன்று, கார் விற்பனை வளர்ச்சியும் 5 ஆண்டுகளுக்கு பின் சரிவை சந்தித்துள்ளது. இதனால், வாகன உற்பத்தி மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்புத் தலைவர் ராஜன் வதேரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்," கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்ப்பது கட்டாயமாக்கப்பபட்டு இருக்கிறது. இதனால், பைக், ஸ்கூட்டர் மற்றும் கார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று, எரிபொருள் விலை உயர்வு, காப்பீட்டு பிரிமீயம் தொகை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, வேலை இழப்பு பிரச்னை, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு உள்ளிட்டவை பயணிகள் வாகன விற்பனை பிரிவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, என்று வதேரா தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு அவான்டியம் அட்வைசர்ஸ் ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜி.ராமகிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின்னர், முறைசாரா தொழிற்துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, தகவல் தொழில்நுட்பத் துறையிலும், தொலைதொடர்புத் துறையிலும் வேலைவாய்ப்பில் நிலவும் நிச்சயமற்ற போக்கு வாகன விற்பனைத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். அந்த துறையில் பணியில் இருப்பவர்களும் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையிலேயே பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால், புதிய வாகனங்கள் வாங்கும் திட்டத்தை பலரும் தள்ளிபோட்டுள்ளனர். தேர்தலுக்கு பின்னர், இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், உடனடியாக வாகன விற்பனையில் பெரிய அளவில் ஏற்றும் ஏற்படும் என்று சொல்ல முடியாது," என்று கூறினார்.

"பெருநகரங்களில் ஓலா, உபர் டாக்சிகளை எளிதாக கிடைப்பதும் புதிய கார் வாங்குவதற்கு மெட்ரோவாசிகள் ஆர்வம் காட்டவில்லை," என்று ஹோண்டா கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு முன்னாள் அதிகாரி ஞானேஸ்வர் சென் கூறி இருக்கிறார்.

மேலும், பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் ஸ்கூட்டர்களுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதால், இந்த மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் உற்பத்தியை குறைத்துள்ளது. இதே உத்தியை பல இருசக்கர வாகனங்கள் கையில் எடுத்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் கூட கடந்த ஜனவரி முதல் கார் உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது. கடந்த மாதம் 25 சதவீதம் அளவுக்கு உற்பத்தியை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற பின்னரே, வாகன உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








