ஹோண்டாவின் வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்திய நவி... யூகங்கள் கிளம்பியதற்கு காரணம் இதுதான்...
ஹோண்டா நிறுவனத்தின் வரலாற்றில் நவி மோட்டோ-ஸ்கூட்டர் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா நவி மோட்டோ-ஸ்கூட்டர் (Moto-scooter), கடந்த 2016ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக லான்ச் செய்யப்பட்டது. இதன்பின் 1 லட்சம் நவி மோட்டோ-ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற இலக்கை எட்ட ஹோண்டா நிறுவனத்திற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது.

அதிகம் விற்பனையாகும் டூவீலர்களின் பட்டியலில், ஹீரோ ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிளுக்கு இணையாக முன்னணி இடத்தில் உள்ள ஆக்டிவா ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்துதான், நவி மோட்டோ-ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் உருவாக்கியது.

ஆனால் ஆக்டிவா உடன் ஒப்பிடும் அளவிற்கு நவி விற்பனையாகவில்லை. எனவே விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, கடந்தாண்டு ஜூலை மாதம் நவி மோட்டோ-ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் சில அப்டேட்களை செய்தது.

இதன்பின் நவி மோட்டோ-ஸ்கூட்டரின் விற்பனை அதிவேகமாக உயரும் என ஹோண்டா கணக்கு போட்டது. ஆனால் நடந்தது வேறு. ஹோண்டா நிறுவனம் மன கணக்கு போட்டதற்கு நேர் எதிராக நவி மோட்டோ-ஸ்கூட்டரின் விற்பனை அதிவேகமாக சரிந்தது.

இதன்படி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் ஒரே ஒரு நவி மோட்டோ-ஸ்கூட்டர் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதற்கு அடுத்து வந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நவி மோட்டோ-ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பூஜ்ஜியம்.

ஆம், உண்மைதான். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நவி மோட்டோ-ஸ்கூட்டர் கூட விற்பனை செய்யப்படவில்லை. இத்தனைக்கு இவ்விரு மாதங்களும் பண்டிகை காலம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பண்டிகை காலங்களில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்.

ஆனால் நவி மோட்டோ-ஸ்கூட்டர் அப்படி இருந்தும் கூட விற்பனையில் சோபிக்கவில்லை. எனவே தற்போது 2 விதமான யூகங்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதில், முதலாவது நவி மோட்டோ-ஸ்கூட்டரின் உற்பத்தியை ஹோண்டா நிறுவனம் நிறுத்தி விடலாம் என்பதுதான்.

என்றாலும் இதுகுறித்து தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சூழலில் நவி மோட்டோ-ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் மீண்டும் அப்டேட் செய்து வெளியிடலாம் என மற்றொரு யூகம் உலா வந்து கொண்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி 125 சிசி அல்லது அதற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் காம்பி-பிரேக் சிஸ்டம் (Combi-brake System) கட்டாயமாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti Lock Braking System) இடம்பெறுவது கட்டாயமாகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனவே இந்த பாதுகாப்பு ஒழுங்கு விதிகளுக்கு இணங்கும் வகையில், நவி மோட்டோ-ஸ்கூட்டரை ஹோண்டா தற்போது அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஹோண்டா நவி மோட்டோ-ஸ்கூட்டரின் விலை 44,775 ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

நவி மோட்டோ ஸ்கூட்டரில், 109 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7,000 ஆர்பிஎம்மில் 7.89 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 8.96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ஒருவேளை நடப்பாண்டில் ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட நவி மோட்டோ-ஸ்கூட்டரை வெளியிட்டாலும், இதே இன்ஜின்தான் இடம்பெறும் எனவும், ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரை அது அடிப்படையாக கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்டேட் செய்யப்படுவதால், அதன் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








