சொந்த செலவில் சூன்யம்..! 5 இளைஞர்கள் போலீசிடம் பிடிபட இதுதான் காரணம்... சிரித்து தள்ளும் மக்கள்..!
சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டதைப் போல் இளைஞர்கள் சிலர் போலீஸாரிடம் சிக்க அவர்களே காரணமாக அமைந்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விபத்துகளுக்கு முக்கிய காரணமே போக்குவரத்து விதிமீறல்கள்தான். இது இந்தியாவில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் அரங்கேறி வருகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத சாலைகளை இங்கு காண முடியாது. எனவேதான் அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

இந்த கசப்பான நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து விதிகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, கூடுதலாக திருத்தங்கள் செய்யப்பட்டும் வருகின்றன. இருப்பினும், வாகன ஓட்டிகள் விதகளைக் கடைபிடித்ததாக இல்லை. மேலும், போலீஸார் கண்களில் மண்ணைத் தூவித் தப்பித்து வருகின்றனர்.

இருப்பினும், விடாப்பிடியாக சிசிடிவி, சமூக வலைதளம் ஆகியவற்றின் வாயிலாக விதிமீறல்வாதிகளை தேடிக் கண்டறிந்து காவல்துறையினர் களையெடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே சமூக வலைதளத்தின் வாயிலாக உலா வந்த வீடியோக்களின் அடிப்படையில் போலீஸார் ஐந்து இளைஞர்களைக் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. டெல்லி போலீஸார் அண்மைக் காலங்களாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக இரும்பு கரம் நீட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இதனடிப்படையிலேயே சிசிடிவி கேமிராக்கள் மட்டுமின்றி இணையத்திலும் தங்களின் கவனத்தை அவர்கள் செலுத்த ஆரம்பித்து வருகின்றனர்.

அவ்வாறு செய்யப்பட்ட கண்கானிப்பில் சிக்கியவர்களே இந்த ஐந்து இளைஞர்கள். இவர்கள் ஐவரும் பொது வெளியில் வாகன ஸ்டண்டை செய்து, அதன் படம் பிடித்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி, லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு விதிமீறல் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரவி விட்டனர். குறிப்பிட்ட அந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிக வைரலானதை அடுத்து, அது டெல்லி போலீஸாரின் கண்களிலும் சிக்கியது.

இதைத்தொடர்ந்தே தங்களின் அதிரடி நடவடிக்கையாக இளைஞர்கள் அனைவரையும் போலிஸார் தேடிப் பிடித்து தற்போது கைது செய்திருக்கின்றனர். கைதாகியிருக்கும் அந்த நபர்கள் சோனு கஸ்யப், கமல், பவன், சச்சின் மற்றும் விபுல் ஷர்மா ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலை நகர் டெல்லியைப் பூர்வீமாகக் கொண்டவர்கள் ஆவர்.

நண்பர்களான இந்த ஐவரும் சக நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களில் சென்ற போதே சாகச செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது, பைக்கின்மீது ஏறி நின்று பயணித்தல், கால் வைப்பான்கள் மீது நின்றபடி ஹேண்டில் பாரை விட்டு பயணித்தல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை அவர்கள் செய்திருந்தனர். இதுமட்டுமின்றி, ட்ரிபிள்ஸ் மற்றும் ஹெல்மெட் அணியாதது என பல்வேறு விதிமீறல்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதுபோன்ற விதிமீறல்கள் காரணங்களுக்காகவே போலீஸார் ஐவரையும் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். இவர்களுடன் ஸ்டண்டிற்காக பயன்படுத்தப்பட்ட பைக்குகளும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு காரணமான வீடியோவை இளைஞர்களின் நண்பர்களில் ஒருவரே எடுத்துள்ளார். அதை அவரே சக நண்பர்கள் மற்றும் சமூக வலைதளத்திலும் பகிர்ந்திருந்தார். இவ்வாறே வீடியோ வைரலாகியது.

வாகன ஸ்டண்ட் என்பது ஓர் சாகச செயல் ஆகும். இதனை பொதுவெளியில் அல்லாமல் இதற்காகவே அமைக்கப்பட்டிருக்கும் தனியார் ரேஸிங் டிராக்கில் செய்தால் எந்தவிதமான நடவடிக்கையும் பாயாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், பொதுவெளியில் இதனைச் செய்கின்ற பட்சத்தில் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க கூடும்.
அதிகபட்ச அபராதம், வாகன பறிமுதல் போன்ற பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இதுமட்டுமின்றி, ஸ்டண்டின்போது கடுகளவும் கவனம் சிதறினால் மிகப்பெரிய சிக்கல்களை எல்லாம் ஏற்படுத்துவிடும். இது அவருக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடும். எனவேதான் பொதுவெளியில் சாகச செயல் அறவேக் கூடாது என்கின்றது போக்குவரத்து விதிகள்.


Click it and Unblock the Notifications








