இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்...
க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஆம்பியர் தனது விற்பனை சந்தையை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் 23 புதிய டீலர்ஷிப்களை இந்தியாவில் துவக்கியுள்ளது.

இந்த புதிய டீலர்ஷிப்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இ-ஸ்கூட்டர்களின் தரம், விலை மற்றும் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றி தெரிந்துகொள்வது எளிதானதாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு கிமீ-க்கு ரூ.0.15 என்ற குறைவான விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்பியர் நிறுவனம் இந்த புதிய 23 டீலர்ஷிப்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நிறுவியுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து தற்சமயம் வி-48 எல்ஏ, மேக்னஸ் 60, ரியோ லா மற்றும் ரியோ லே போன்ற ஹை-ஸ்பீடு ஜீயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் மிட் ரேஞ்ச் மற்றும் எண்ட்ரீ லெவல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய டீலர்ஷிப்கள் திறப்பது குறித்து க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாகேஷ் பசவன்ஹல்லி கூறுகையில், க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் முழுவதும் ஆட்டோமொபைல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இதனை எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஆம்பியர் மூலமாக தான் செயல்படுத்தவுள்ளோம். நாங்கள் மக்களின் தினசரி போக்குவரத்து பயணத்தை மாற்ற திட்டமிட்டுள்ளோம். டீலர்ஷிப் அதிகரிப்பு என்பது அதன் ஒரு பகுதி தான். இதனால் 2020ல் எங்களது தயாரிப்புகளையும் சர்வீஸ் சலுகைகளையும் அதிகளவில் நீங்கள் பார்க்கலாம் என கூறினார்.

ஆம்பியர் ப்ராண்ட்டின் முதன்மை செயலதிகாரி பி சஞ்சீவ் இதுகுறித்து கூறுகையில், எங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை, இளமையான ட்ரெண்ட்டை விரும்புவோரில் இருந்து பிஸியான போக்குவரத்தை மேற்கொள்பவர்கள் வரை என அனைத்து விதமான ரைடர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். எங்களது தயாரிப்புகள் இந்தியாவில் இதுவரை 50,000 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளன. மேலும் ஆம்பியர் நிறுவனம் 180க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது என கூறினார்.

ஆம்பியரின் டீலர்ஷிப்கள் நாடு முழுவதும் இவ்வாறு அதிகரிக்கப்படுவதால் பசுமையான வாகனங்களை விரும்புவோர் எளிதாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியும் என ஆம்பியர் நிறுவனம் உணர்கிறது. உலக தரத்திற்கு இணையான அதிக திறன் வாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வருங்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் இந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆம்பியர் நிறுவனம் தனது ஜீயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இலவச இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தையும் மற்ற மாடல் ஸ்கூட்டர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான தள்ளுபடிகளையும் இலவச ஆக்ஸ்சரீஸையும் வழங்கியுள்ளது. சலுகைகளை தவிர்த்து ஜீயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஃபேம் 2 என்ற திட்டத்தின் மூலமாகவும் சில தள்ளுபடிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு இப்போது தான் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இதன் வளர்ச்சி வேகமாக உள்ளதாகவே தெரிகிறது. அதிலும் ஆம்பியர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 23 புதிய டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டிருப்பது அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








