ஆம்பியர் பேட்டரி சந்தா திட்ட அறிமுகம்! இதோட ஸ்பெஷல் தெரிஞ்சா புது ஸ்கூட்டர் வாங்க திட்டம் போடுவீங்க!
வாடிக்கையாளர்களுக்கு எளிதில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி சென்று சேரும் விதமாக ஆம்பியர் நிறுவனம், புதிய திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆம்பியர் நிறுவனம், அதன் தயாரிப்புகளின் விற்பனைக்கு தடைக் கல்லாய் அமைந்திருக்கும் இடையூறுகளை நீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக ஆட்டோவெர்ட்ஸ் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்துடன் அது கூட்டணியையும் தொடங்கியிருக்கின்றது.

தற்போது, பெரும்பாலான மின்சார வாகனங்களின் விற்பனைக்கு மிகப்பெரிய தடைக் கல்லாய் இருப்பது, அவற்றின் உச்சபட்ச விலையும், போதிய கட்டமைப்பு வசதியும் இல்லாததுமே மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

விலையைக் காட்டிலும், அடிப்படை வசதிகளான சார்ஜிங் நிலையம் மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் பெரியளவில் பயன்பாட்டிற்கு வராததே மிக மிக முக்கியமான இருக்கின்றது.

எனவேதான், மின்வாகனங்களின் விற்பனை தற்போதும் குழைந்தை பருவ நிலையிலேயே இருந்து வருகின்றது. இந்த குறையை போக்கும் விதமாக, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில பிற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியிருக்கின்றன. இதனடிப்படையிலேயே ஆம்பியர் நிறுவனமும் ஆட்டோவெர்ட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்துடன் கூட்டு வைத்திருக்கின்றது.

தனது வாடிக்கையாளர்களுக்கு மிக சுலபமாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் சென்றடையும் விதமாக இந்த கூட்டணியை ஆம்பியர் மேற்கொண்டிருக்கின்றது. சந்தா திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த சேவை வழங்கப்பட இருக்கின்றது.

எனவே, சந்தா சேவையைப் பெற விரும்பும் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர் உரிமையாளர், குறிப்பிட்ட தொகையைச் செலுத்திய பின்னரே சிறப்பு சேவையை பயன்படுத்த முடியும். அதாவது, குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 1,990 செலுத்த வேண்டும். இது மாத சந்தா ஆகும். இதன் பின்னரே முழுமையாக சார்ஜேற்றப்பட்ட பேட்டரிகள் ஆம்பியர் மின்சார ஸ்கூட்டரின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

அதேசமயம், இந்த சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டரின் விலையிலும் சலுகை வழங்கப்பட இருக்கின்றது. உதாரணமாக, ஓர் நபர் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மேக்னஸ் ப்ரோ மின்சார ஸ்கூட்டரை வாங்க வேண்டுமானால், அதற்கு ரூ. 73,990 செலுத்த வேண்டும். இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இதுவே, பேட்டரி சந்தா திட்டத்தின்கீழ் மின்சார ஸ்கூட்டரை வாங்கினால் ரூ. 49,990 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் சந்தாவாக ரூ. 1,990 சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளுக்காக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் அடிப்படையிலேயே பேட்டரி சந்தா தொடங்கப்பட்டுள்ளது.

இதனைச் சோதனையோட்டமாக ஆம்பியர் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தொடங்கியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, நாட்டின் பிற நகரங்களிலும் இந்த சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காப்பீட்டுடன் கூடிய ஐந்தாண்டுகள் கூடுதல் வாரண்டி, சர்வீஸ் மற்றும் 24 மாதங்கள் இலவச பராமரிப்பு உள்ளிட்டவற்றையும் வழங்க அது திட்டமிட்டுள்ளது. இதில், பேட்டரி மாற்றம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவையும் அடங்கும்.

இத்துடன், முழு சந்தா திட்டத்தையும் ஆம்பியர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம்பியரின் மேக்னஸ் ப்ரோ மற்றும் ஜீல் ஆகிய மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்திற்கு ரூ. 2,777 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ மாடலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மின்சார ஸ்கூட்டரில் 1.2kW திறன் கொண்ட மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், 60V30Ah லித்தியன் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 70 முதல் 80 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும்.


Click it and Unblock the Notifications








