அட்ராசக்கை... 80 புதிய ஷோரூம்களை திறக்க ஏப்ரிலியா திட்டம்!
இந்தியாவில் 80 புதிய இருசக்கர வாகன ஷோரூம்களை திறப்பதற்கு ஏப்ரிலியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மிக சிறப்பாக இருந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தற்போது திறன் மிக்க, தனித்துவமான டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களை நோக்கி கவனத்தை திசை திருப்பி உள்ளனர். இதனை மனதில் வைத்து மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை இருசக்கர வாகன நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த வரிசையில், ஏப்ரிலியா நிறுவனமும் கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனித்துவமான ஸ்டைலிலான எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், அதாவது ஜூலை- செப்டம்பர் இடையிலான காலக்கட்டத்தில் இந்த இரண்டு புதிய ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதம் புக்கிங் துவங்கப்படும் என்றும், செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த புதிய ஸ்கூட்டர்களை மிகச் சிறப்பாக வாடிக்கையாளர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை ஏப்ரிலியா நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

அதிக வாடிக்கையாளர் வட்டத்தை பெறுவதற்கும், மிக நெருக்கமான சேவையை வழங்குவதற்கும் ஏதுவாக புதிதாக 80 இருசக்கர வாகன ஷோரூம்களை திறப்பதற்கு ஏப்ரிலியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதல் நிலை நகரங்கள் தவிர்த்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் புதிய ஷோரூம்களை திறக்கும் எண்ணத்துடன் ஏப்ரிலியா திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் சற்று பிரம்மாண்டமான தோற்றத்தை பெற்ற க்ராஸ்ஓவர் ஸ்கூட்டர் போல டிசைன் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர்களில் இரட்டை எல்இடி ஹெட்லைட், இரட்டை எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் உள்ளன. பெரிய விண்ட்ஸ்கிரீன் அமைப்பு, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இருக்கைக்கு கீழே பொருட்கள் வைப்பதற்கான இடவசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டரிலும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின்களின் தொழில்நுட்ப விபரங்களை ஏப்ரிலியா இதுவரை வெளியிடவில்லை.

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் பாரமதியில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும். ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் சுஸுகி பர்க்மேன்ட் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருடன் போட்டி போடும். ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கு இப்போதைக்கு நேரடி போட்டி இல்லை.


Click it and Unblock the Notifications








