2021 டக்கார் ராலியில் தனிநபர் பிரிவில் களமிறங்கும் இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன்!
வரும் 2021ம் ஆண்டு நடக்க இருக்கும் டக்கார் ராலி பந்தயத்தில் இந்திய வீரரான ஆசிஷ் ராவ்ரேன் பங்கு கொள்ள இருக்கிறார். மேலும், அவர் எந்த ஒரு அணியிலும் சேராமல் தனி நபர் பிரிவில் களம் காண உள்ளார்.

உலகின் மிகவும் சவாலான ராலி மோட்டார் பந்தயமாக டக்கார் கருதப்படுகிறது. வீரர்களின் மனோதிடம், உடல் திடம், சமயோஜிதம் மற்றும் வாகனத்தின் திறனை ஒட்டுமொத்தமாக பிழிந்து எடுத்துவிடும் வகையில் இந்த ராலி ரேஸ் மிக சவாலானதாக உள்ளது. வாகன வகை மற்றும் வீரர்களுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த போட்டி நடக்கிறது. அணி சார்பிலும், தனிநபராகவும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

இந்த ராலி பந்தயம் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த ராலி பந்தயத்தில் சில வீரர்களும், வாகனங்களும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒதுங்கிவிடுவர். இந்தளவுக்கு மோசமான இந்த ராலி பந்தயம் உலகின் ஒவ்வொரு ராலி ரேஸ் வீரரின் கனவு போட்டியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த ஜனவரியில் நடந்தது. மேலும், சவூதி அரேபியாவில் முதல்முறையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, வரும் ஆண்டுக்கான டக்கார் ராலி பந்தயமும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு வீரர்களும், உலகின் முன்னணி அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய வீரர்களும், இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களின் மோட்டார் பந்தய அணிகளும் டக்கார் ராலியில் பங்கு கொண்டு வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவின் பிரபல ராலி பந்தய வீரர் ஆஷிஷ் ராவ்ரேன் வரும் 2021ம் ஆண்டுக்கான டக்கார் ராலி பந்தயத்தில் பங்கு கொள்ள இருக்கிறார்.

அதுவும், எந்த அணியின் சார்பிலும் இல்லாமல் தனி நபர் பிரிவில் பங்கு கொள்ள இருக்கிறார். அணி சார்பில் பங்கு கொள்ளும்போது பல்வேறு உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தனிநபராக கலந்து கொள்ளும்போது அனைத்து விதமான பணிகளையும் சொந்த முயற்சியிலேயே செய்து கொள்ள நேரிடும்.

அதாவது, வாகனத்தில் ஏற்படும் பழுது, இடையில் ஏற்படும் தடங்கல்களை சொந்த முயற்சியில் தீர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். டக்கார் ராலி அமைப்பின் சார்பில், வாகனத்திற்கு தேவையான டயர், கூடாரம் மட்டும் தினசரி சென்று இடத்திற்கு கொண்டு வந்து தரப்படும். வாகனத்தை ஓட்டி முடித்த பின்னர், ஓய்வு எடுக்க முடியாது. வாகனத்தில் உள்ள பழுதுகள், பராமரிப்புப் பணிகளை அந்த வீரரே செய்து கொள்ள வேண்டி இருக்கும்.

மல்லே மோட்டோ க்ளாஸ் என்று குறிப்பிடப்படும் இந்த பிரிவின் கீழ்தான் ஆசிஷ் ராவ்ரேன் பங்கு கொள்ள இருக்கிறார். இது நிச்சயம் அணி சார்பில் பங்கு கொள்ளும் வீரர்களை விட சவால் நிறைந்ததாக இருக்கும்.

மேலும், தனிநபர் பிரிவில் களமிறங்கும் ஆசிஷ் ராவ்ரேன் கேடிஎம் 450 ராலி ரெப்லிக்கா பைக்கை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டக்கார் ராலியில் இந்த பிரிவில் முதல் இந்திய வீரராக ஆசிஷ் ராவ்ரேன் பங்கு கொள்ள இருப்பது பெருமைக்குரிய விஷயமாகவே பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








