சென்னை, பெங்களூரில் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் சென்னை, பெங்களூர் நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய மாடல்களின் வருகையால் அனல் பறக்கிறது. விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று வருவதால், பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஏத்தர் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்களையும் களமிறக்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் என்ற இரண்டு புதிய மாடல்களை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகம் கொரோனாவால் தள்ளிப் போய் வந்ததது.

ஒருவழியாக ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் முதல்கட்ட டெலிவிரிப் பணிகள் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து காத்து கிடந்த வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு பின்னர் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இதனிடையே, கடந்த ஜனவரி 28ந் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்தவர்களுக்கு 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிசன் ஸ்கூட்டர்களை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதில், சேஸீ மற்றும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்பை காட்டும் வகையிலான விசேஷ ஒளி ஊடுரும் தன்மை கொண்ட பாடி பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கலெக்டர்ஸ் எடிசன் மாடல் கருப்பு - சிவப்பு வண்ணக் கலவையிலும், சாதாரண 450எக்ஸ் ஸ்கூட்டர்கள் சாம்பல், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கின்றன.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.6kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இதன் ரகத்தில் மிக செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்த நிலையில், சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, புனே, மும்பை, கோவை, கொச்சி, கோழிக்கோடு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஏத்தர் ஸ்கூட்டர் தனது ஷோரூம்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இங்கு வர்த்தக செயல்பாடுகள் துவங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தக்கவாறு ஓசூரில் புதிய ஆலையை ஏத்தர் நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்நாட்டு உற்பத்தி தவிர்த்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏத்தர் நிறுவனத்திற்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








