விரைவில் வருகிறது பிரிமீயம் அம்சங்களுடன் புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
அதிக பிரிமீயம் அம்சங்களுடன் புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் விற்பனை செய்து வருகிறது. அதிக செயல்திறனும், பிரிமீயம் அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஏத்தர் 450 ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து ஏத்தர் 450X என்ற புதிய மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஏத்தர் 450எக்ஸ் என்ற பெயரில் வரும் இந்த மாடல் லிமிடேட் எடிசன் மாடலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும்.

இந்த புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சூப்பர் ஸ்கூட்டர் என்று அடைமொழியுடன் குறிப்பிடுகிறது ஏத்தர் நிறுவனம். எனவே, செயல்திறனிலும், தொழில்நுட்ப அம்ங்களிலும் இந்த புதிய ஸ்கூட்டர் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.
ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விரைவில் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. ஆன்லைன் மூலமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், நீங்கள் இந்த புதிய ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய விரும்பினால் ஏத்தர் நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் பிரத்யேக பக்கத்தில் உங்களது விபரங்களையும், விருப்பத்தையும் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்பிறகு ஏத்தர் நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்பை வைத்து முன்பதிவு செய்ய முடியும். ஏத்தர் 450 ஸ்கூட்டர் போல அல்லாமல், இந்த புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏத்தர் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ஏத்தர் 450 ஸ்கூட்டர் வாங்கியிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உரிமையாளர்களுக்கும் ஒதுக்கீடு அடிப்படையில் இந்த புதிய ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

அடுத்த சில வாரங்களில் இந்த புதிய ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி, புனே, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலும் விரைவில் ஷோரூம்களை அமைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் இறங்கி இருக்கிறது.

வர்த்தக விரிவாக்கத்தை மனதில் வைத்து ஓசூரில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஏத்தர் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








