கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. ஒன்றல்ல, இரண்டல்ல.. ரூ.100 கோடியை வாரி வழங்கும் பஜாஜ்..
உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்காக ரூ. 100 கோடியை பஜாஜ் நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா, எந்த பக்கம் திரும்பினாலும் இந்த ஒரு வார்த்தை மட்டும்தான் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். மேலும், பல லட்சம் மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையில் புதிய நபர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதித்து வருகின்றனர்.

இதன் தீவிரம் ஒவ்வொரு நாளும் விரிவடைந்துக் கொண்டே வருவதால் உலக நாடுகள் பல முடங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே நிலைதான் தற்போது இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால், புதிய நபர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை மக்கள் வெளியே நடமாட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அனைத்து விதமான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே தற்போது முடங்கி நிற்கின்றது. இருப்பினும், கொரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இதே நிலை நீடித்தால் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவ கண்கானிப்பு செய்வது மிக கடினமானதாக மாறிவிடும். ஆகையால், அரசு புதிய தற்காலிக மருத்துவமனைகளை நிறுவ திட்டமிட்டு வருகின்றது.
அந்தவகையில், ஒரு சில மாநிலங்கள் ஏற்கனவே இந்த பணியில் களமிறங்கி தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி வருகின்றன. இந்த பணியில் தனியார் நிறுவனங்களும் தங்களின் பங்காக உதவியை செய்து வருகின்றன.

அந்தவகையில், இருசக்கர வகான உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் குழுமம் ரூ. 100 கோடியை மருத்துவ உதவிக்காக இந்திய அரசிற்கு வழங்கியிருக்கின்றது.
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவையான சுகாதார உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ. 100 கோடி நிவாரண நிதியாக நேற்று (வியாழக்கிழமை) பஜாஜ் வழங்கியது.

குறிப்பாக, ஐ.சி.யுக்களை மேம்படுத்தவும், கூடுதல் வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கவும், சோதனையை மேம்படுத்தவும், தனிமைப்படுத்தும் மருத்துவ அறைகளை அமைக்கவும் இந்த நிதி வழங்கப்பட்டிருப்பதாக அது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கின்றது.

இந்த நிதியுதவி அரசு மற்றும் அடையாளம் காணப்பட்ட சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என பஜாஜ் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில், கோவிட் -19 ஐ சமாளிக்க தேவையான முக்கிய சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் ஆதரவளிக்கும்.

தொடர்ந்து, அரசு மற்றும் எங்கள் 200 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நெட்வொர்க்குகளுடன் இணைந்து தேவையான உதவிகளும் வழங்கப்படும் என பஜாஜ் தெரிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் இந்த முயற்சி நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

மேலும், இந்நிறுவனம் இந்த நிதியுதவியுடன் நிறுத்திக் கொள்ளாமல் உணவு மற்றும் தங்கு வசதியையும் ஏற்படுத்தித் தர இருக்கின்றது.
நாட்டில் பலர் வீடு இல்லாமல் சாலையோரங்களில் தங்கி வருகின்றனர். இதில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைத்து வயதினரும் அடங்குவர்.

தற்போது நாடே முடங்கியிருக்கின்ற காரணத்தால் அவர்களின் வாழ்வாதரம் மிகவும் கவலைக்கிடமாக மாறியிருக்கின்றது. இவர்களுக்கு உதவியளிக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம் தற்காலிக தங்கும் இடம் மற்றும் உணவை வழங்க முயற்சி எடுத்து வருகின்றது. மேலும், உதவிக்காக காத்திருக்கும் தினக் கூலி தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் உதவி செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட பாதுகாப்பு சேவை மற்றும் மக்களுக்கு தேவையான உதவியை வழங்க இருப்பதாகவும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனோ போராட்டத்தில் தங்களின் சுய நலம் மறந்து பிறர் நலம் காக்க பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவிப்பதாக பஜாஜ் கூறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








