கொரோனாவின் கோரத்தாண்டவம்... பஜாஜ் வாகன ஆலையில் 79 பேருக்கு பாஸிட்டிவ்!
அவுரங்காபாத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ வாகன ஆலையில் பணிபுரிந்து வரும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது அங்கு பணிபுரியும் பணியாளர்களையும், நிர்வாகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் பொருளாதார பாதிப்பில் இருந்து சற்றே மீளும் வகையிலும், தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைப்பதற்கு ஏதுவாகவும் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை கடந்த மாதம் முதல் வழங்கி வருகின்றன.

இதனை பயன்படுத்தி, கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் வாகன உற்பத்தி ஆலைகள் கடந்த மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டு குறைந்த அளவிலான உற்பத்திப் பணிகள் நடந்து வருகின்றன. உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்கும் முயற்சிகளிலும் வாகன நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும் பெரும் வாகன உற்பத்தி ஆலைகளில் சமூக இடைவெளி மற்றும் கொரோனா கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்பட்டு பணியாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி இருந்தும், கண்ணில் மண்ணை தூவிவிட்டு கொரோனா பரவி வருகிறது.

மானேசரில் உள்ள மாருதி கார் ஆலை, சென்னை ஹூண்டாய் கார் ஆலை, பெங்களூர் டொயோட்டா கார் ஆலை பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு தூய்மை பணிகள் செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ வாகன உற்பத்தி ஆலையில் கொரோனா புகுந்து கோர முகத்தை காட்டி இருக்கிறது. அங்கு பணிபுரிந்து வரும் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இது அங்கு பணிபுரிந்து வரும் பிற பணியாளர்கள், குடும்பத்தினரையும், பஜாஜ் ஆட்டோ நிர்வாகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஆலையில் இருந்து பைக்குகள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், ஆர்டர்களும் கைவசம் இருப்பதால், உற்பத்தியை அதிகரிக்க பஜாஜ் ஆட்டோ முயற்சி செய்து வந்தது.

இந்த நிலையில்தான் ஆலையில் பணிபுரியும் 79 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவுரங்காபாத் வாகன உற்பத்தி ஆலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்காலிகமாக மூடி உள்ளது. அங்கு கிருமி நாசினி மூலமாக கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் திங்கட்கிழமை முதல் ஆலையில் உற்பத்திப் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தனிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், பஜாஜ் ஆட்டோ ஆலையில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது பெரும் கவலை ஏற்படுத்தி உள்ளது. ஏபிபி டிவி செய்தியை மூலமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








