கேடிஎம், ட்ரையம்ஃப், ஹஸ்க்வர்னா பைக்குகளுக்காக புதிய ஆலையை அமைக்கும் பஜாஜ்!
பிரிமீயம் பைக்குகளை உற்பத்தி செய்வதற்காக மஹாராஷ்டிராவில் புதிய இருசக்கர வாகன ஆலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அமைக்க உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்திய சந்தை மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பஜாஜ் ஆட்டோ தயாரிப்புகளுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.
மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள சகன் என்ற இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா போன்ற பிரிமீயம் பைக்குகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உள்நாடு மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் இந்த ஆலையில் இருந்து பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனத்துடனும் பஜாஜ் ஆட்டோ கூட்டணி அமைத்து விலை குறைவான பிரிமீயம் பைக் மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் பைக்குகளும் சகனில் உள்ள பஜாஜ் ஆலையில்தான் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் அனைத்து பைக்குகளையும் உற்பத்தி செய்வதற்கான தேவையை கருத்தில்கொண்டு புதிய ஆலையை அமைக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

புதிய ஆலையையும் சகனிலேயே அமைக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. இதற்காக மஹாராஷ்டிர மாநில அரசுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த புதிய இருசக்கர வாகன ஆலையை ரூ.650 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. வரும் 2023ம் ஆண்டில் இந்த புதிய ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்கப்படும்.

இந்த ஆலையில் கேடிஎம், ஹஸ்க்வர்னா மற்றும் ட்ரையம்ஃப் பிராண்டுகளின் பிரிமீயம் பைக்குகள் உற்பத்தி செய்யப்படும். மேலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இங்கு உற்பத்தி செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








