எண்ணற்ற மனங்களை கவர்ந்த பல்சருக்கு வயது 18... வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பஜாஜ்...
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான பைக்குகளில் ஒன்றான பல்சரை பஜாஜ் அறிமுகம் செய்து 18 ஆண்டுகளாகியுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் புதிய அப்கிரேட் செய்யப்பட்ட பல்சரை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் பல்சர் மாடல் பைக்கும் ஒன்று. இது, பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்காக மட்டுமில்லாமல், இந்தியாவில் சாலச்சிறந்த விற்பனையைப் பெறும் டூவீலர்களிலும் ஒன்றாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, பல்சர் வரிசையில் பல்வேறு மாடல்களை பஜாஜ் நிறுவனம் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது. இதுமட்டுமின்றி, புதிய அப்டேட்டுகளையும் அது வழங்கி வருகின்றது.

இந்த பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்து நடப்பாண்டுடன் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தினத்தை சிறப்பிக்கும் விதமாக புதிய டீசர் வீடியோ ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்தவீடியோவில், சுட்டித்தனம் நிறைந்த ஓர் சிறுவன் தனது இளம் வயதை எட்டிய பின்னர் பல்சர் பைக்கை வாங்குவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. இதில், சிறப்பு என்னவென்றால் அந்த இளைஞர் தனது 18 வயதை எட்டியதன் காரணமாக பைக்கை வாங்குவதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.

இது, தற்போது பல்சர் பைக்கும் 18 ஆண்டுகளாக சந்தையில் இருப்பதைக் குறிப்பிட்டு காட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, வீடியோ மூலம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், முன்னதாக பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மாடலே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கே தற்போது இந்த விளம்பர வீடியோவிலும் இடம்பெற்றிருக்கின்றது.

200சிசி இருசக்கர வாகனங்களின் வரிசையில் அதிகம் விற்பனையாகும் பைக்காக பல்சர் என்எஸ்200 மாடல் இருக்கின்றது. இந்த பைக் கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்படும் ஓர் மாடல் ஆகும். ஆகையால், இவ்விரு பைக்குகளின் கட்டுமானமும் பெரியளவில் வித்தியாசமாக காணப்படவில்லை.

பஜாஜ் நிறுவனம் இந்த பல்சர் என்எஸ் 200 பைக்கை முதல் முறையாக 2012ம் ஆண்டுதான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது விரைவில் அமலுக்கு வரவிருக்கும் புதிய பிஎஸ்-6 உமிழ்வு விதிக்கு இணையான எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது.
இந்த தரத்திலான எஞ்ஜின்கள் குறைந்த அளவு திறனை வெளிப்படுத்தினாலும், அதிக பயனுள்ளவையாக காட்சியளிக்கின்றன.
குறிப்பாக, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த அளவு மாசு வெளிபாடு உள்ளிட்டவற்றில் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் அதிக பயன்பாட்டை வழங்குகின்றது. இதற்காகவே, எஃப் ஐ எனப்படும் ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சிறப்பு தொழில்நுட்பங்கள் எதுவுமே தற்போதைய பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினில் வழங்கப்படவில்லை.

மேலும், தற்போதைய பிஎஸ்-4 தரத்திலான 200 என்எஸ் பைக்கில் 199.5சிசி திறன் லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 23பிஎச்பி மற்றும் 18.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். ஆனால், புதிய பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் இதைக் காட்டிலும் குறைவான திறனையே வெளிப்படுத்தும்.

பஜாஜ் மட்டுமின்றி நாட்டில் இயங்கும் முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த தரத்திலான வாகனங்கள் தற்போது விற்பனையில் இருக்கம் மாடல்களைக் காட்டிலும் சற்றே அதிகமான விலையைப் பெறும். இதற்கு புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப செய்யப்பட்ட அப்டேட்டே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், பிஎஸ் 4 வாகனங்களைக் காட்டிலும் ரூ .5 அல்லது அதற்கும் அதிகமான விலையில் பிஎஸ்-6 வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்பதில் சந்தேகமே இல்லை. பஜாஜ் பல்சர் என்எஸ் 200 தற்போது கிட்டத்தட்ட 1.15 லட்சத்திலிருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோன்று, ஆர்எஸ் 200 விலை சுமார் 1.40 லட்சம் ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications








