பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் அறிமுகம் தள்ளிப்போகிறது!
கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள சூழ்நிலைகளால், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் மாடலின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருசக்கர வாகன உற்பத்தியில் மிக வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனத்துடனும் கூட்டணி அமைத்து ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய பைக் மாடல்களை உருவாக்குவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, 200சிசி முதல் 700சிசி வரையிலான ரகத்தில் பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் பைக் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், வரும் 2022ம் ஆண்டு முதல் பைக் மாடலை பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகளால் முதல் பைக் மாடலை 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், வரும் 2021ம் ஆண்டு கொரோனா பிரச்னைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறைந்து, வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும்பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்டபடி, 2022ம் ஆண்டில் முதல் மாடலை களமிறக்குவது குறித்தும் பரிசீலிக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் உருவாக்கப்படும் பைக்குகள் புனே அருகே உள்ள பஜாஜ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்காக, புதிய ஆலையை நிர்மாணிக்கவும் பஜாஜ் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பிரிமீயம் பைக்குகள் பஜாஜ் மற்றும் ட்ரையம்ஃப் பிராண்டுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் ட்ரையம்ஃப் பிராண்டில் பைக்குகளை ஏற்றுமதி செய்யவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் மாடலுக்கு இணையான புதிய மோட்டார்சைக்கிளை களமிறக்கவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இரு நிறுவனங்களுக்கும் வர்த்தகத்தில் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








