சூப்பர் பைக்கில் 300கிமீ வேகத்தில் பறந்த இளைஞர்! 30லட்ச ரூபாய் பைக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மின்னல் வேகத்தில் பறந்த விலையுயர்ந்த பைக்கை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமில்லைங்க வாகனங்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், சூப்பர் பைக்குகளின் எண்ணிக்கைக் கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இவற்றின் எண்ணிக்கையைப் போலேவே, அதுசார்ந்த நடக்கும் விதிமீறல் சம்பவங்களும் அதிகளவில் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில், யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1 பைக்கில் செய்யப்பட்ட விதிமீறல் மற்றும் இதற்காக போலீஸார் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளத்தில் கிடைத்த தகவலின்படி, விதிமீறிய அந்த இளைஞர் ப்ளூபீஸ்ட் 46 எனும் வாகனம் சார்ந்து இயங்கும் ஓர் சமூக வலைதள நிறுவனத்தின் உரிமையாளர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்தான், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெறிச்சேடிக் கிடக்கும் பெங்களூரு நகரச் சாலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அதி வேகத்தில் பறந்துச் சென்றுள்ளார்.

அவர், மணிக்கு சுமார் 300 கிமீ என்ற வேகத்தில் பறந்ததாகக் கூறப்படுகின்றது. இதையேதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோவும் உறுதி செய்திருக்கின்றது. இந்த வீடியோ அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிக அதிகமாக வைரலாகியது. இதுவே, தற்போது அவர் போலீஸாரிடம் சிக்கவும் காரணமாகியிருக்கின்றது.

போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கும் பைக் யமஹா நிறுவனத்தின்கீழ் விற்பனையாகும் மிக விலையுயர்ந்த பைக்காகும். ஒய்இசட்எஃப் ஆர்1 எனும் பெயரைக் கொண்டிருக்கும் இந்த பைக் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியின் காரணாக விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த பைக் ரூ. 20 லட்சம் என்ற அதிகபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

எனவே, ஆன்ரோடில் இந்த பைக் ரூ. 25 லட்சம் வரையில் விற்பக்கப்பட்டு வருகின்றது. அதேசமயம், தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பைக்கின் விலை ரூ. 30 லட்சம் வரையில் இருக்கலாம் என கூறப்படுகின்றது. காரணம் அந்த பைக்கில் பல ஆஃப்டர் மார்க்கெட் கூடுதல் அக்ஸசெரீஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பைக்கின் சைலென்சர் மற்றும் எஞ்ஜின் திறனைக் கூட்டும் வகையில் பாகங்கள் உள்ளிட்டவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமான ஒன்று அக்ரோபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம். இதன் விலை மட்டுமே லட்ச ரூபாய் தொடும். எனவே, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பைக்கின் ரூ. 30 லட்சம் வரை இருக்கும் என தெரிகின்றது.

கொரோனா விதியை மீறியது, உச்சபட்ச வேகத்தில் பறந்து மற்றும் பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயணித்தது போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த பைக்கை பறிமுதல் செய்திருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த இளைஞர் மீது எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
யமஹா நிறுவனம் இந்த விலையுயர்ந்த பைக்கின் புதிய தலைமுறை மாடலை கடந்த 2018ம் ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது. இந்த பைக்கில் 998சிசி திறன் கொண்ட் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பயர்ட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, அதிகபட்சமாக 13,500 ஆர்பிஎம்மில் 197 பிஎச்பி பவரையும், 11,500 ஆர்பிஎம்மில் 112.4 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இது 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டு இயங்குகின்றது. இத்தகைய சிறப்புடைய பைக்கைதான் பெங்களூரு போலீஸார் விதிமீறியதன் காரணத்திற்காக பறிமுதல் செய்திருக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த பைக்கைப் போலீஸார் சிலர் பயன்படுத்துவதாக, தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பெங்களூரு போலீஸார், பைக்கைப் பறிமுதல் செய்த பின்னர், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது தவறான தகவலில் பரப்பப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது முதல் முறையல்ல. அதாவது, பொதுசாலையில் அதி-திறன் கொண்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் பரிசோதித்து பார்க்கும் நிகழ்வுகள் பல முறை அரங்கேறியிருக்கின்றன.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கவே மேற்கத்திய நாடுகளில் விரிவான மற்றும் தரமான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகச்சிறந்த உதரணம் ஜெர்மன் நாட்டில் உள்ள ஆட்டோபாஹ்ன் சாலைகள் (Autobahn).

இந்த சாலையில், வாகனங்கள் எந்த மாதிரியான வேகத்தில் வேண்டுமானாலும் சீறிப் பாயலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேசமயம், தரமான சாலை இருப்பதன் காரணத்தால் இந்த உச்சபட்ச வேகத்தில் பயணிப்பது என்பது மிக மிக ஆபத்தானது ஆகும். அதிலும், முக்கியமாக இந்தியாவில் உள்ள தரமற்ற சாலைகளில் இந்த வேகத்தினால் ஏற்படும் பின் விளைவு கற்பனைக்கு எட்டாத ஒன்று.

என்னதான் நாம் அதிகளவில் சாலை வரி செலுத்தினாலும் நாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் தரமற்றதாகவே காணப்படுகின்றது. இந்த சாலைகளில் நடுத்தர வேகத்தில் செல்வதே ஆபத்தான ஒன்றாக இருக்கின்றது. இந்த நிலையில் மணிக்கு 300 கிமீ வேகம் என்பது அந்த இளைஞருக்கு மட்டுமின்றி பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவேதான், அதிவேக ஓட்டுநர்களை போலீஸார் தேடிபிடித்து கண்டித்து வருகின்றனர். இம்மாதிரியான நடவடிக்கையிலேயே யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1 பைக்கின் உரிமையாளர் சிக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








